தேன் ....எனத் தொடங்கும் காதல் பாடல்
********************************************************
தேனருவிச் சாரலிலே தேவதையுன் பேரழகில்
மேனகையோ என்றே வியந்திருந்தேன் - வானமுதம்
பூச்சொறிய நாம்நனைந்த பூரிப்பில் வாசமாய்ப்
பாச்சரம் சூட்டுவேன் பார் .
வா எனத் தொடங்கும் பாடல் - வைகை
****************************************************
வாராய் பெருக்கெடுத்து வைகையே ஆடியில்
தாராய் வளத்தைத் தடையின்றி !- நீராடி
நீந்திக் களித்தெங்கள் நெஞ்சமெலாம் தித்திக்க
பாந்தமாய் வாராய் பரிந்து .
பூத்து எனத் தொடங்கி - ( குளம் )
*********************************************
பூத்துச் சிரிக்கும் பொலிவாய்க் கமலமும்
வாத்துகளும் சுற்றியங்கே வந்திடும் - காத்திருக்கும்
ஒற்றைக்கால் கொக்கும் ஒயிலாய்! சிலிர்க்கவைக்கும்
வற்றாக் குளத்தின் வனப்பு .
பழகு எனத் தொடங்கி ( விளக்குமார் )
**************************************************
பழகிடத் தேயும் பளிச்சென மாற்றும்
அழகாய் அழுக்கை அகற்றிப் !- புழங்கிடும்
வீடுசுத்த மாகும் விளக்குமார் கொண்டுகூட்டிப்
போடுகுப்பைக் கூளம் புறம் .
காண் எனத் தொடங்கி ( எருமை )
**************************************************** காண்பதற் கச்சமூட்டும் காட்டெருமை கானகத்தில்
தீண்டிடில் செங்குருதி சிந்தவைக்கும் - மூண்டிடும்
கோபத்தால் தாக்குமது கூர்கொம்பால் குத்தியே
ஆபத்து நீயே அறி.
ஆம் எனத் தொடங்கி ( திங்கள் )
*******************************************
ஆம்பல் இதழ்விரிக்கும் அம்புலி கண்டதும்
பூம்பொழில் பொய்கையில் பொன்னொளியில் - சோம்பலின்றித்
திங்கள் வளையவரும் சீராய் இரவினில்
எங்குமொளி கூட்டும் இனிது .
என்று எனத் தொடங்கி ( சாதி எதிர்ப்பு)
****************************************************
என்று மடியுமிந்த சாதீயப் பைத்தியம்
கொன்று மடங்காது கூத்தாடும் - வென்றிடும்
காலம் இனிவருமோ காத்திருந்து மென்னபயன் ?
ஓலமிட்டும் வாரா துயர்வு .
வீண் எனத் தொடங்கி ( இளமை )
**********************************************
வீண்பேச்சுப் பேசாமல் வெந்துழன்று நோகாமல்
மூண்டெழும் கோபம் முயன்றடக்கித் - தாண்டிடில்
என்றும் இளமை இனிதான தொன்றாகும்
துன்பம் விலக்கும் சுகம் .
தான் எனத் தொடங்கி (தனிமை )
*******************************************
தான்மட்டும் தன்னந் தனியாய் இருப்பதனால்
தேன்நிலவும் தித்தித் திடுமா,சொல் ! - ஏன்வாட்டம்
தேவையோ வீண்கவலை தென்றலினைத் தூதுவிடு
பாவையவள் வந்திடுவாள் பார் .
வழி எந்த தொடங்கி விழி என முடிக்கவும் (காதல் )
**********************************************************
வழிதோறும் பூத்து மணத்தைப் பரப்பி
மொழியின்றிப் பேசிடும் முல்லை - குழிவிழுந்த
கன்ன முடையாள் கருங்கூந்த லிற்சிரிக்க
மின்னுமதைக் கண்டென் விழி .
கண்ணில் எனத் தொடங்கி ( நிறங்கள் )
****************************************************
கண்ணில் விரியும் கவின்மிகு காட்சியில்
வண்ணம் பலவும் வசீகரிக்கும்! - கண்கொள்ளாக்
காட்சியாய் நீலக் கடலும் விரிந்தவானும்
ஆட்சிசெயும் உள்ளத்தை யாம் .
மறைத்து எனத் தொடங்கி ( உண்மையின் மேன்மை )
*****************************************************************************
மறைந்தே யிருப்பினும் வாய்மை,பொய் யாகா
குறைகள் களையும் குணத்தால் !- நிறைமனத்தில்
உண்மை உறங்காமல் ஓங்கி வளர்ந்திடும்
திண்மை தருமே தினம் .
No comments:
Post a Comment