Tuesday, August 8, 2017

எக்காலம் ??

உறவுகளை  யெண்ணி உயிருருகி டாமல்
துறவுநிலை தந்து துயரறுப்ப தெக்காலம் ?

துயரறுத்த பின்னே துணையிருப்பா னென்ற
மயக்கநிலை மாறி மனம்தெளிவ தெக்காலம் ?

தெளிவினைத் தந்து திருவடியைக் காட்ட
களிப்பினா லுள்ளம் கனிவடைவ தெக்காலம் ?

கனியும் படிகாட்சி காட்டியெனைத் தேற்றி 
இனிநடக்கும் யாவும் இனிதாவ தெக்காலம் ?

இனிதான வாழ்வெனினும் ஏழ்பிறவி வேண்டா 
தனிமைத் தவமியற்றத் தான்நினைப்ப தெக்காலம் ?

நினைப்பதெல்லா மிங்கு நிறைவாய் நடக்க 
உனைப்பாடி யானும் உளம்பணிவ தெக்காலம் ?

பணியுமடி யேன்வசம் பக்தியினைக் கண்டு 
பிணியகற்றி என்றன் பிறப்பறுப்ப தெக்காலம் ?

பிறப்பறுக்க நேர்ந்தாலும் பெற்றமனம் பித்தாய் 
மறலிவரு முன்னர்  மனமடங்க லெக்காலம் ?

அடங்காத புலனைந்தும் ஆட்டுவிக்கு மானால் 
சுடலைக்குள் போகுமுன் துன்பொழிவ தெக்காலம் ?

ஒழியாமல் தேங்கும் உளத்தின் கசடை 
வழிகாட்டி யாய்ப்போக்கி வாழ்விப்ப தெக்காலம் ?
 
வாழ்வில் வருதுயரால் மாயா உலகிலே 
பாழ்பட்டி டாமல் பரிவளிப்ப தெக்காலம் ?

பரிவளிக்கும் அன்பில் பனியாய் உருகி 
விரிவான ஞானம் விளங்கவைத்த லெக்காலம் ?

விளங்கவைத்துப் பேரின்ப வீட்டினைத் தந்து 
தளர்ந்தநிலை மாற்றித் தகவளிப்ப தெக்காலம் ?

தகவளித்த பின்னே தளிர்முகக்தைக் காட்டி 
அகங்குளிரும் வண்ணம் அரவணைத்த லெக்காலம் ?

அரவணைக்கு முன்றன் அபரிமித அன்பால்
மரணத்தை வெல்லும் வரம்பெறுவ தெக்காலம் ??





No comments:

Post a Comment