Thursday, August 10, 2017

பற்றிப் படர்ந்திடுவேன் ....!!!


செக்கச் சிவந்தவன் தக்கத் துணையெனப்
>>>பக்க மிருக்கையிலே - மனச் 
சிக்கல் விலகிடும் துக்கம் மறைந்திடும்  
>>>மிக்க விரைவினிலே  !

உச்சி முகர்ந்தெனைப் பிச்சி மலரென 
>>>மெச்சி யகங்குளிர்ந்தான் ! - அவன் 
நச்சுக் களைந்திட மிச்ச மிருந்தவென்
>>>அச்சம் விலகியதே !

கொட்டு மழையினில் பட்டுக் கரத்தினைத் 
>>>தொட்டுத் தழுவினனே ! - அவன் 
விட்டு விலகிடச் சிட்டென் விழிகளில் 
>>>சொட்டி வழிகிறதே !

தத்தை உளமிது கத்திக் கதறினும்
>>>சத்தம் வரவிலையே ! - என் 
சித்தங் கலங்கிட மொத்த முருகிடப் 
>>>பித்தந் தெளியலையே !

உப்புக் கடலினில் சிப்பி விளைந்திடும் 
>>>தப்பு மதிலுளதோ ? - தினம் 
செப்பு மொழியினில் குப்பைக் களைந்திட
>>>வெப்பந் தணிந்திடுமே !

சுற்ற மொதுக்கிட முற்றுந் துறந்தவள் 
>>>பற்றிப் படந்திடுவேன் - உனை 
உற்ற உறவெனப் பெற்ற வரமெனச் 
>>>சுற்றி யடைந்திடுவேன் !!!

சியாமளா ராஜசேகர் 




No comments:

Post a Comment