செக்கச் சிவந்தவன் தக்கத் துணையெனப்
>>>பக்க மிருக்கையிலே - மனச்
சிக்கல் விலகிடும் துக்கம் மறைந்திடும்
>>>மிக்க விரைவினிலே !
உச்சி முகர்ந்தெனைப் பிச்சி மலரென
>>>மெச்சி யகங்குளிர்ந்தான் ! - அவன்
நச்சுக் களைந்திட மிச்ச மிருந்தவென்
>>>அச்சம் விலகியதே !
கொட்டு மழையினில் பட்டுக் கரத்தினைத்
>>>தொட்டுத் தழுவினனே ! - அவன்
விட்டு விலகிடச் சிட்டென் விழிகளில்
>>>சொட்டி வழிகிறதே !
தத்தை உளமிது கத்திக் கதறினும்
>>>சத்தம் வரவிலையே ! - என்
சித்தங் கலங்கிட மொத்த முருகிடப்
>>>பித்தந் தெளியலையே !
உப்புக் கடலினில் சிப்பி விளைந்திடும்
>>>தப்பு மதிலுளதோ ? - தினம்
செப்பு மொழியினில் குப்பைக் களைந்திட
>>>வெப்பந் தணிந்திடுமே !
சுற்ற மொதுக்கிட முற்றுந் துறந்தவள்
>>>பற்றிப் படந்திடுவேன் - உனை
உற்ற உறவெனப் பெற்ற வரமெனச்
>>>சுற்றி யடைந்திடுவேன் !!!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment