உயிர்தேடும் ராகமே! உளம்நாடும் கீதமே !
உடன்வருவாய் நாதமாய் உருகுகிறேன் மௌனமாய் !
அயிரைமீன் துள்ளலாய் அசைந்துவரும் தென்றலாய்
அலைபேசு மோசையாய் அழைக்கின்றேன் ஆடிவா !!
பரிவினிலே அன்னையாய்ப் பாசத்தில் வள்ளலாய்ப்
பனித்துளியின் குளிர்ச்சியாய்ப் பசுங்கிளியின் கொஞ்சலாய்
விரிகூந்தல் மேகமாய் வெண்மதியின் வதனமாய்
விண்மலரும் மின்னலாய் விரைந்தேநீ ஓடிவா !!
வலிசுமந்த நெஞ்சுடன் வனப்பிழந்து தவிப்பவன்
வாழ்விலொளி ஏற்றிட மனக்கவலை மாற்றிட
ஒலிக்கின்ற கடலென உதிக்கின்ற கதிரென
ஒளிர்கின்ற விழியுடன் ஒயிலாகத் தேடிவா !!
கவிபாடும் காவியம் கலையாத ஓவியம்
கனிவான தாய்மனம் கதைபேசும் பொன்முகம்
செவியோரம் தேன்மழை சிலிர்க்கவைக்கும் பூமணம்
சிலைபோலும் பேரேழில் சித்திரமே பாடிவா !!
அழியாத அன்பினை அருவியெனக் கொட்டிட
அகமலர்ந்த காதலால் அமுதகவி வனைந்திடப்
பொழிகின்ற மழையெனப் புத்துணர்ச்சி யளித்திடப்
பொங்கிவரும் வெள்ளமாய்ப் பொலிவுடனே நாடிவா !!
மிளிர்கின்ற சுடரென மெல்லிசையின் சுகமென
மிதந்துவரும் நினைவினில் மெல்லினமே கூடவா !
வளிவரும் இதமென வசந்தத்தைக் காட்டிட
வளைக்கரத்தைப் பற்றிநான் மணமாலை சூட்டவா ??
No comments:
Post a Comment