Sunday, August 13, 2017

அம்பிகாபதி அமராவதி


கானமும் கவிதையும் 
*******************************
அம்பிகாபதி அமராவதி 
********************************
கவிகளிற் சிறந்த கம்பனின் மைந்தன்  
***கவிஞனாம் அம்பிகா பதியும் 
புவிவெலும் திறத்தான் புலிக்கொடி யோனின் 
***புதல்வியாம் பதுமைபோல் பெண்ணாம்
கவின்மிகு அமரா வதியினைக் கண்டு 
***காதலில் வீழ்ந்தனன் என்னும் 
செவிவழி நுழைந்த சேதியைக் கேட்டு 
***சினந்தனன் சோழனுந் தானே !!

பையவே வளர்ந்த காதலில் திளைத்துப் 
***பைத்திய மாயினர் உள்ளம் !
மைவிழி யாளின் அன்பினில் கரைந்து 
***மகிழ்ச்சியில்  பாய்ந்தது வெள்ளம் !
வையகம் போற்ற வாழ்ந்திட எண்ணும்
***மனங்களில் இல்லையே கள்ளம் !
தையலின் தந்தை கொதித்திட லாலே 
***தவிப்பினில் துடித்ததே நெஞ்சம் !!

காமமே யின்றிக் கடவுளைப் பாடக் 
***கட்டளைப் பிறந்ததை ஏற்றுப் 
பாமணம் கமழப் பாடினான் அவையில் 
***பாவையும் பார்த்தனள் மறைந்தே !
சாமரம் கொண்டே வீசினாற் போலே 
***சாதனை யாய்ச்சதம் தொடுமுன் 
கோமகள் திரையை விலக்கிட அவனும் 
***கோதையைப் பாடினன் புகழ்ந்தே !!

மயிரிழை யிலவன் வெற்றியை இழக்க 
***மன்னனும் தண்டனை யாக 
உயிரினைப் பறிக்க ஆணையு மிட்டார்
***உடனவள் தன்னுயிர் நீத்தாள் !
வயிரமாய் வளர்த்த காதலைச் சாய்த்தும் 
***மடிந்தவர் காதலை வென்றார்!
துயிலினை மறந்தே இதயமும் வாடும் 
***துயரிதைப் படித்திடும் போழ்தே !

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment