கானமும் கவிதையும்
*******************************
அம்பிகாபதி அமராவதி
********************************
கவிகளிற் சிறந்த கம்பனின் மைந்தன்
***கவிஞனாம் அம்பிகா பதியும்
புவிவெலும் திறத்தான் புலிக்கொடி யோனின்
***புதல்வியாம் பதுமைபோல் பெண்ணாம்
கவின்மிகு அமரா வதியினைக் கண்டு
***காதலில் வீழ்ந்தனன் என்னும்
செவிவழி நுழைந்த சேதியைக் கேட்டு
***சினந்தனன் சோழனுந் தானே !!
பையவே வளர்ந்த காதலில் திளைத்துப்
***பைத்திய மாயினர் உள்ளம் !
மைவிழி யாளின் அன்பினில் கரைந்து
***மகிழ்ச்சியில் பாய்ந்தது வெள்ளம் !
வையகம் போற்ற வாழ்ந்திட எண்ணும்
***மனங்களில் இல்லையே கள்ளம் !
தையலின் தந்தை கொதித்திட லாலே
***தவிப்பினில் துடித்ததே நெஞ்சம் !!
காமமே யின்றிக் கடவுளைப் பாடக்
***கட்டளைப் பிறந்ததை ஏற்றுப்
பாமணம் கமழப் பாடினான் அவையில்
***பாவையும் பார்த்தனள் மறைந்தே !
சாமரம் கொண்டே வீசினாற் போலே
***சாதனை யாய்ச்சதம் தொடுமுன்
கோமகள் திரையை விலக்கிட அவனும்
***கோதையைப் பாடினன் புகழ்ந்தே !!
மயிரிழை யிலவன் வெற்றியை இழக்க
***மன்னனும் தண்டனை யாக
உயிரினைப் பறிக்க ஆணையு மிட்டார்
***உடனவள் தன்னுயிர் நீத்தாள் !
வயிரமாய் வளர்த்த காதலைச் சாய்த்தும்
***மடிந்தவர் காதலை வென்றார்!
துயிலினை மறந்தே இதயமும் வாடும்
***துயரிதைப் படித்திடும் போழ்தே !
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment