பைந்தமிழ்ச்செம்மல் வ. க. பரமநாதன் அவர்களுக்கு வாழ்த்து !!!
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
இலங்கையி லுள்ள எழில்மிகு மூராம்
***இணுவையூர் தனில்பிறந் தவரே !
கலைமக ளருளால் இளம்வய தினிலே
***கவிவனை வதிற்சிறந் தவரே !
கலகங்கள் சூழப் பிழைப்பதற் காகக்
***கலவர பூமியைப் பிரிந்தாய் !
புலம்பெயர்ந் தாலும் தாய்த்திரு நாட்டைப்
***பொன்னெனப் போற்றியே மதித்தாய் !!
பைந்தமிழ்ப் பற்றால் மரபினைப் பயிலப்
***பைந்தமிழ்ச் சோலையி லிணைந்தாய் !
நைந்திடா வண்ணம் தாய்மொழி காக்க
***நன்குகற் றறிந்துநீ தேர்ந்தாய் !
பைந்தமிழ்ச் செம்மல் பட்டமும் பெற்றுப்
***பயின்றதைக் கற்பித்துச் சிறந்தாய் !
'பைந்தமிழ்க் குவை'யென் றொருபெரும் விருதைப்
***பாவலர் வழங்கிட மகிழ்ந்தாய் !!
கனிவுடன் பேச்சும் பண்புடன் பணிவும்
***கவிஞனுன் மேன்மையைக் கூட்டும் !
நனியழ கான படைப்புகள் யாவும்
***நண்பநின் திறத்தினைக் காட்டும் !
இனிவருங் காலம் நலத்துடன் வாழ
***இறைவனின் திருவரு ளாலே
நினைத்தன யாவும் கைவரப் பெற்று
***நிம்மதி யோடுநீ வாழி !!
சியாமளா ராஜசேகர்
முனைவர் அர. விவேகானந்தன் அவர்களுக்கு வாழ்த்து !!!
* * * * * * * * * * * ** * * * * * * * * * * * * * * * * ** * * * * * * * * * * ** * * *
விருப்பொடு சோலை நாடி
***வியத்தகு வெற்றி யீட்டி
அருந்தமிழ்ப் பற்றி னாலே
***அயர்விலாச் சேவை யாற்றித்
திருவண்ணா மலைக்கி ளையைச்
***சிறப்புடன் வழிந டத்தும்
செருக்கிலா விவேகா னந்த!
***தீந்தமிழ் போல வாழி !
இலக்கியக் கூட்டம் கூட்டி
***இலக்கண வகுப்பெ டுத்தாய்!
பலவகைப் பாக்கள் நெய்யப்
***பயிற்சிகள் நன்க ளித்தாய்!
தலைக்கனம் சிறிது மின்றித்
***தமிழையே மூச்சாய்க் கொண்டாய் !
கலைமக ளருலா லென்றும்
***காசினி போற்ற வாழி !
ஆவலாய் மாணாக் கர்க்கும்
***அழகுவெண் பாட்டி யற்றக்
காவலாய்த் தானி ருந்துக்
***கருத்துட னதைநூ லாக்கிப்
பூவனம் போல்ம ணக்கும்
***புகழ்மிகு முனைவ ! சோலைப்
பாவலர் பாசத் தம்பி
***பைந்தமிழ்க் குருத்தே வாழி !
No comments:
Post a Comment