Monday, April 29, 2019

வாழ்த்து ...!!!

பைந்தமிழ்ச்செம்மல் வ. க. பரமநாதன் அவர்களுக்கு வாழ்த்து !!!
* * * * * * * * * * * *  * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *  * *
இலங்கையி லுள்ள எழில்மிகு மூராம் 
***இணுவையூர் தனில்பிறந் தவரே !
கலைமக ளருளால் இளம்வய தினிலே 
***கவிவனை வதிற்சிறந் தவரே  !
கலகங்கள் சூழப் பிழைப்பதற் காகக் 
***கலவர பூமியைப் பிரிந்தாய் !
புலம்பெயர்ந் தாலும் தாய்த்திரு நாட்டைப் 
***பொன்னெனப் போற்றியே மதித்தாய் !!

பைந்தமிழ்ப் பற்றால் மரபினைப் பயிலப்
***பைந்தமிழ்ச் சோலையி லிணைந்தாய் !
நைந்திடா வண்ணம் தாய்மொழி காக்க 
***நன்குகற் றறிந்துநீ தேர்ந்தாய் !
பைந்தமிழ்ச் செம்மல் பட்டமும் பெற்றுப் 
***பயின்றதைக் கற்பித்துச் சிறந்தாய் !
'பைந்தமிழ்க் குவை'யென் றொருபெரும் விருதைப் 
***பாவலர் வழங்கிட மகிழ்ந்தாய் !!

கனிவுடன் பேச்சும் பண்புடன் பணிவும்  
***கவிஞனுன் மேன்மையைக் கூட்டும் ! 
நனியழ கான படைப்புகள் யாவும் 
***நண்பநின் திறத்தினைக் காட்டும் !
இனிவருங் காலம் நலத்துடன் வாழ 
***இறைவனின் திருவரு ளாலே 
நினைத்தன யாவும் கைவரப் பெற்று 
***நிம்மதி யோடுநீ வாழி !!


சியாமளா ராஜசேகர் 

முனைவர் அர. விவேகானந்தன் அவர்களுக்கு வாழ்த்து !!!
* *  * * * * * * * * * ** * * * * * * * * * * * * * * * * ** * * * * * * * * * * ** * * * 

விருப்பொடு சோலை நாடி 
***வியத்தகு வெற்றி யீட்டி 
அருந்தமிழ்ப் பற்றி னாலே 
***அயர்விலாச் சேவை யாற்றித் 
திருவண்ணா மலைக்கி ளையைச்
***சிறப்புடன் வழிந டத்தும் 
செருக்கிலா விவேகா னந்த!
***தீந்தமிழ் போல வாழி !

இலக்கியக் கூட்டம் கூட்டி 
***இலக்கண வகுப்பெ டுத்தாய்!
பலவகைப் பாக்கள் நெய்யப்
***பயிற்சிகள் நன்க ளித்தாய்!
தலைக்கனம் சிறிது மின்றித் 
***தமிழையே மூச்சாய்க் கொண்டாய் !
கலைமக ளருலா லென்றும் 
***காசினி போற்ற வாழி !

ஆவலாய் மாணாக் கர்க்கும்
***அழகுவெண் பாட்டி யற்றக் 
காவலாய்த் தானி ருந்துக்
***கருத்துட னதைநூ லாக்கிப்
பூவனம் போல்ம ணக்கும் 
***புகழ்மிகு முனைவ ! சோலைப் 
பாவலர் பாசத் தம்பி 
***பைந்தமிழ்க் குருத்தே வாழி !


No comments:

Post a Comment