Monday, April 8, 2019

காலத்தை வெல்லும் கண்ணதாசன் ...!!!


குழந்தையுள்ளம் கொண்டவனாம் கண்ண தாசன் 
***குன்றாத புகழுக்குச் சொந்தக் காரன் !
எழுதிவைத்த பாக்களினால் இதயம் கொய்தான் 
***ஏதேதோ மாயங்கள் நம்முள்  செய்தான் ! 
அழுகைவரும் சூழலிலு முள்ளம் தேற்ற
***ஆறுதலைப் பாட்டிடையே பொதிந்து வைத்தான் !
ஒழுக்கநெறி புகட்டிவிடு மாசா னாக 
***உயர்வான தத்துவத்தை எளிதாய்ச் சொன்னான் !!

நற்றமிழின் இலக்கியத்தின் சாறெ டுத்து 
**நயத்தோடு மிகவெளிதாய்ப் பருகத் தந்தான் !
சொற்கட்டில் சந்தங்கள் அணிவ குக்கச்
***சோர்ந்தபோது மயிலிறகாய் நீவச் செய்தான் !
கற்றோர்க்கும் மற்றோர்க்கும் நுட்ப மாகக்
***கருணையுடன் வாழ்வியலைப் புரிய வைத்தான் !
பெற்றவனு பவங்களைத்தன் பாட்டி லேற்றிப் 
***பிறருக்கு நல்லவழி காட்டி யானான் !!

கண்ணேறு படும்வகையில் உதட்டி னின்றும் 
***காட்டருவி யாய்வந்து கவிதை கொட்டும் ! 
வெண்பாக்கள் விருத்தங்கள் சிந்துப் பாக்கள் 
***விரல்நுனியில் கசிந்துவந்து முத்தம்கொஞ்சும் !
எண்ணற்ற படைப்புகளால் ஈர்த்தா னுள்ளம்
***என்றென்றும் இருந்ததில்லை அவனுள் கள்ளம் !
கண்ணனிடம் அன்புவைத்த கவிதைக் கோமான் 
***காலத்தை வென்றேயிப் புவியில் வாழ்வான் !

சியாமளா ராஜசேகர் 

 

No comments:

Post a Comment