Monday, April 29, 2019

பணி ஓய்வு வாழ்த்து !

நிறைவாகப் பணிசெய்து நிறைவின்று செய்கின்றாய் 
குறைவற்ற உழைப்பாலே குன்றனைய  நிற்கின்றாய் 
கறையில்லாப் பேரோடு களிப்புடனே செல்கின்றாய் 
இறையருளால் எந்நாளும் இனிதாக வாழியவே !!

சுமையென்று கருதாமல் சுறுசுறுப்பாய் நிதமுழைத்தாய் 
இமைப்போதும் சோராமல் இல்லத்தை நிர்வகித்தாய் 
சமைத்ததையும் பிறருக்குச் சளைக்காமல் பங்குவைத்தாய் 
அமைதியுடன் வேலைகளை அலுக்காமல் முடித்தாயே !!

சிறப்பாகப் பிள்ளைகளைச் சீராட்டி வளர்த்துவிட்டாய் 
திறமையுடன் சேமித்துத் திருமணத்தை முடித்துவைத்தாய் 
பிறர்துன்பம் துடைத்திடவே பெரும்பொழுதைக் கழித்திட்டாய் 
உறவோடு நட்பினையும் உயிராக மதித்தாயே !!

உதவியெனக் கேட்குமுன்னே உன்கரத்தை நீட்டிடுவாய் 
இதமான சொற்களினால் இதயத்தை வருடிடுவாய் 
எதிலுமுன்றன் பங்களிப்பால் இமயமென உயர்ந்திடுவாய் 
மதிப்போடு தான்நடந்து மனங்குளிர வைத்தாயே !!

வருகின்ற நாளெல்லாம் மகிழ்வில்நீ மலரவேண்டும் 
விரும்பியன யாவுமுன்றன் வீடுதேடி வரவேண்டும் 
திருமகளே உன்றனுக்குச் சீர்கொண்டு தரவேண்டும் 
பெருமைகளும் உனைச்சேரப் பேரின்பம் பெறுவாயே !!

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment