Thursday, December 20, 2018

பாரதியே !

வெள்ளையனை வெளியேற்றத்
துடித்தாய் - தேச
விடுதலைக்கு வித்தாகத்
திகழ்ந்தாய் - மக்கள்
உள்ளமதில் அடிமைத்தளை
உடைத்தெறியும் பக்குவத்தை
உணர்ச்சிமிகு உரைகளினால்
வளர்த்தாய் - அவர்தம்
உயிர்க்காற்றாய் உணர்வுகளில்
நிறைந்தாய் !!
தாரணியில் பலமொழிகள்
கற்றாய் - நம்
தமிழ்மொழிபோல் இனிமையில்லை
என்றாய் - இந்தப்
பாரதிரப் புயலெனவே
பறங்கியரின் கொட்டத்தைப்
பாரதத்தில் நசுக்கிவிட
எழுந்தாய் - தமிழ்ப்
பாக்களிலே வீரத்தை
விதைத்தாய் !!
சாதிமத வேற்றுமைகள்
களைந்தாய் - பாட்டில்
சமத்துவத்தைக் காட்டியுளம்
கனிந்தாய்! - நல்ல
நீதிநெறி யில்நின்று
நெஞ்சத்தில் உரமூட்டி
நெருப்புமிழும் கவிதைகளால்
கனன்றாய் - மண்ணில்
நிலைகெட்ட மாந்தரெண்ணித்
தவித்தாய் !!
சிறுமைகளைக் கண்டுபொங்கிச்
சினந்தாய் - நற்
சிந்தனைகள் பாமழையாய்ப்
பொழிந்தாய் - நன்கு
முறுக்கிவிட்ட மீசையொடு
முண்டாசு கவியேநீ
மூச்செனவே சுதந்திரத்தை
நுகர்ந்தாய் - வெற்றி
முரசொலிக்க விடுதைலையை
உணர்ந்தாய் !!
புதுமைகளை வரவேற்கத்
துணிந்தாய் - பெரும்
புயலெனவே புரட்சிகளைப்
புரிந்தாய் - சாதி
மதம்பிடித்துத் திரிபவரின்
மடமைகளைக் களையெடுத்து
மகிமைமிகு பலகவிகள்
நெய்தாய் - நெஞ்சில்
மனிதநேயம் ஊற்றெடுக்கச்
செய்தாய் !!
பெண்ணடிமை கண்டுமனம்
கொதித்தாய் - பெண்டிர்ப்
பெருமையுற வேண்டுமென
நினைத்தாய் - நீ
விண்ணளவு குரல்கொடுத்து
விடுதலைக்குப் போராடி
விலங்குகளைத் தகர்த்தெறியச்
செய்தாய் - மாதர்
மேன்மைநிலை அடையவழி
வகுத்தாய் !!

No comments:

Post a Comment