Sunday, December 9, 2018

கலைஞருக்குப் புகழாஞ்சலி ...!!!

அஞ்சுகத்தாய் ஈன்றெடுத்த ஆரூரின் வித்தே
***அண்ணாவின் இதயத்தில் இடம்பிடித்த முத்தே !
அஞ்சாத உறுதியுடன் பகுத்தறிவுச் சுடராய்
***ஐந்துமுறை அரசாண்ட தமிழகத்தின் சொத்தே !
வஞ்சகமாய் நஞ்சுமிழ்ந்த எதிரிக்கும் நயமாய் 
***மனங்கோணா எள்ளலுடன் பதிலளித்த கனிவே !
தஞ்சமென வந்தோரை அரவணைத்து மகிழும்
***தமிழ்த்தாயின் தவப்புதல்வ ! வரலாறாய் வாழி !!
நற்றிறமை யோடுநலத் திட்டங்கள் தீட்டி
***நலிந்தோரும் ஏற்றமுற வழிவகைகள் செய்தாய் !
பற்றுடனே கழகத்தைப் பக்குவமாய்ப் பேணிப்
***பார்வியக்கப் பகைவிரட்டிப் போராடி வென்றாய் !
முற்போக்குக் கருத்துகளைப் படைப்புகளில் பெய்து
***முத்தமிழின் முகவரியாய் முப்போதும் திகழ்ந்தாய் !
சொற்பொழிவு கேட்போரை மெய்மறக்கச் செய்யும்
***சூத்திரத்தை நன்குணர்ந்தே அருவியெனப் பொழிந்தாய் !!
அண்ணாவின் வழியொற்றிக் கொள்கைகளிற் சிறந்தே
***அயராத உழைப்பாலே நற்பணிகள் செய்தாய் !
பெண்களுக்குச் சொத்துரிமைத் தடையாவு மகற்றிப்
***பெருமதிப்பாய் அவர்நிலையும் சீர்பெறவே செய்தாய் !
கண்ணான செந்தமிழைச் செம்மொழியாய் உயர்த்திக்
***கடைக்கோடித் தமிழனையும் பூரிக்க வைத்தாய் !
மண்ணுலகம் உள்ளவரை மறக்காதிவ் வையம்
***மாண்புமிகு தலைமையெனப் பேர்பெறுவாய் திண்ணம் !!
விடைபெற்றுச் சென்றாலும் மறக்கவில்லை நெஞ்சம்
***மீண்டுமுன்றன் தமிழ்கேட்க செவியிரண்டும் கெஞ்சும் !
கடலலைகள் ஓசையில்நீ கண்விழிக்க வேண்டும்
***கரகரப்பு குரலாலே கவர்ந்திழுக்க வேண்டும் !
மடைதிறந்த வெள்ளமாய்நின் கவிபாய வேண்டும்
***மறுபடியும் அதைப்பருகிக் கசிந்துருக வேண்டும் !
உடன்பிறப்பே எனவிளித்து மடல்விரிய வேண்டும்
***உரைவீச்சின் ஈர்ப்பினிலே புவிமயங்க வேண்டும் !!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment