Thursday, December 20, 2018

வீர சுதந்திரம்

கனல்தெறிக்கும் கவிதைகளால் எழுச்சி யூட்டிக்
***கருத்துகளால் உதிரத்தில் வீரம் பாய்ச்சி
மனத்தினிலே தமிழனென்ற இறுமாப் போடு 
***மக்கள்தம் உள்ளத்தைப் பண்ப டுத்தி
இனமதத்தைக் கடந்தன்பால் தமிழர் வாழ்வில்
***ஏற்றத்தை மலர்வித்த பாச ஏணி !
மனக்கண்ணில் சுதந்திரத்தை முன்பே கண்டு
***மகிழ்ச்சியுடன் பாநெய்த தேச ஞானி !!
வீரசுதந் திரம்வேண்டி வெகுண்டெ ழுந்து
***விடுதலைக்கு வித்திட்டுப் பாய்ந்த வேங்கை !
பாரதிரப் பாக்களினால் புரட்சி செய்து
***பக்குவமாய் மக்களுள மீர்த்த செம்மல் !
ஆரமுதாம் தமிழ்மொழியில் பற்று கொண்டே
***அழியாத கவிதைகளைத் தந்த கோமான் !
ஈரமனத் தோடுசமத் துவத்தைப் போற்றி
***இத்தரணி யில்செழிக்க வைத்த வல்லோன் !!
பெண்ணுரிமைக் காய்த்தொடர்ந்து குரல்கொடுத்துப்
***பெண்ணினத்தின் உயர்வுக்கு வழிவகுத்து
மண்ணுலகில் மங்கையர்தம் நிலையை மாற்றி
***மாண்போடு வாழவழி செய்த நல்லோன் !
புண்ணாகப் புரையோடிப் போய்க்கிடந்த
***பொலிவிழந்த சமூகத்தின் இருளைப் போக்க
விண்ணதிர முழக்கமிட்டு மீட்டுத் தந்த
***வீரசுதந் திரத்தையென்றும் பேணு வோமே ..!!!
( பாரதியார் இல்லத்தில் )

No comments:

Post a Comment