இலாவணி ...!!
********************
ஆத்தங்கரை ஓரத்திலே காத்திருக்கேன் ஒத்தயிலே
***அத்தமக அன்னமேநீ எங்கே எங்கே ??
நாத்துநடும் போதினிலே கூப்பாடு போடாதே
***நான்களத்து மேட்டினிலே இங்கே இங்கே !!!
வேலையெல்லாம் ஒண்ணுமில்ல சாயுங்காலம் வாரேன்னு
***வெள்ளந்தியாச் சொன்னதெல்லாம் பொய்யோ பொய்யோ ??
வேலைக்காளு இல்லயினு அப்பனாயி கூப்பிட்டாக
***வேறென்ன சொன்னதெல்லாம் மெய்யே மெய்யே !!!
பட்டணத்தில் சீலவாங்கிப் பத்திரமா வச்சிருக்கேன்
***பக்கத்துல வந்துதந்தா தப்பா தப்பா ??
கெட்டிக்கார மச்சானே எண்ணமெல்லாம் நானறிவேன்
***கேட்டக்கேள்வி நிச்சயமா தப்பே தப்பே !!!
ஆசையாக ரெண்டுபேரும் பேசத்தடை போடலாமா
***ஆத்தாடி! கோபம்மட்டும் ஏனோ ஏனோ ??
மீசைக்காரா ! உந்தன்மேல கோபமொண்ணும் இல்லையையா
***வெக்கம்வந்தா என்னசெய்ய நானே நானே !!!
சந்தப்பக்கம் வந்தியனா செல்ஃபிநாம சேர்ந்தெடுப்போம்
***சம்மதமா சொல்லுபுள்ள நீயே நீயே ??
சொந்தபந்தம் பாத்துப்புட்டா கண்ணுகாது மூக்குவச்சிச்
***சோடிப்பாய்ங்க வம்பெதுக்குப் போயா போயா !!!
மார்கழிக்கு அப்புறமாத் தைப்பொறந்த பின்னாலே
***மாமனொன்னக் கட்டிக்கவா சொல்லு சொல்லு ??
சீர்செனத்தி யோடவந்து அத்தையிடம் பொண்ணுகேட்டுச்
***சீக்கிரமாப் பக்கத்தில நில்லு நில்லு !!!
தொட்டுத்தொட்டுப் பேசினாத்தான் தப்பென்ன செல்லக்கண்ணு
***தோப்போரம் கொஞ்சநேரம் வரியா வரியா ??
பட்டுச்சேல வாங்கிவந்து மூணுமுடிச்சு போட்டுவிடு
***பாலும்பழத் தோடுவாரேன் சரியா சரியா ??
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment