Monday, April 9, 2018

இலாவணி

இலாவணி ...!!
********************
ஆத்தங்கரை ஓரத்திலே காத்திருக்கேன் ஒத்தயிலே
***அத்தமக அன்னமேநீ எங்கே எங்கே ??
நாத்துநடும் போதினிலே கூப்பாடு போடாதே 
***நான்களத்து மேட்டினிலே இங்கே இங்கே !!!

வேலையெல்லாம் ஒண்ணுமில்ல சாயுங்காலம் வாரேன்னு
***வெள்ளந்தியாச் சொன்னதெல்லாம் பொய்யோ பொய்யோ ??
வேலைக்காளு இல்லயினு அப்பனாயி கூப்பிட்டாக 
***வேறென்ன சொன்னதெல்லாம் மெய்யே மெய்யே !!!

பட்டணத்தில் சீலவாங்கிப் பத்திரமா வச்சிருக்கேன் 
***பக்கத்துல வந்துதந்தா தப்பா தப்பா ??
கெட்டிக்கார மச்சானே எண்ணமெல்லாம் நானறிவேன் 
***கேட்டக்கேள்வி நிச்சயமா தப்பே தப்பே !!!

ஆசையாக ரெண்டுபேரும் பேசத்தடை போடலாமா 
***ஆத்தாடி! கோபம்மட்டும்  ஏனோ ஏனோ ??
மீசைக்காரா ! உந்தன்மேல கோபமொண்ணும் இல்லையையா
***வெக்கம்வந்தா என்னசெய்ய நானே நானே !!!

சந்தப்பக்கம் வந்தியனா செல்ஃபிநாம சேர்ந்தெடுப்போம்
***சம்மதமா சொல்லுபுள்ள நீயே நீயே ??
சொந்தபந்தம் பாத்துப்புட்டா கண்ணுகாது  மூக்குவச்சிச் 
***சோடிப்பாய்ங்க வம்பெதுக்குப் போயா போயா !!! 

மார்கழிக்கு அப்புறமாத் தைப்பொறந்த பின்னாலே 
***மாமனொன்னக் கட்டிக்கவா சொல்லு சொல்லு ??
சீர்செனத்தி யோடவந்து அத்தையிடம் பொண்ணுகேட்டுச்
***சீக்கிரமாப் பக்கத்தில நில்லு நில்லு !!!

தொட்டுத்தொட்டுப் பேசினாத்தான் தப்பென்ன செல்லக்கண்ணு 
***தோப்போரம் கொஞ்சநேரம் வரியா வரியா ??
பட்டுச்சேல வாங்கிவந்து மூணுமுடிச்சு போட்டுவிடு 
***பாலும்பழத் தோடுவாரேன் சரியா சரியா ??

சியாமளா ராஜசேகர் 


No comments:

Post a Comment