Sunday, April 8, 2018

பிறந்த வீடே போய்வரவா ???


மஞ்சள் தாலி கழுத்திலாட 
***மன்ன னுடனே கிளம்புகிறேன் !
நெஞ்சம் கனத்துக் கிடக்கிறது 
***நெகிழ்வில் விழிகள் வடிக்கிறது !
பஞ்சாய்ப் பறந்த மனமெங்கும் 
***பதற்றம் தொற்றிக் கொள்கிறது !
வஞ்சி யென்றன் உணர்வுகளை 
***வடிக்க சொற்கள் தேடுகிறேன் !!  (24)

இருபத் திரண்டு வருடங்கள் 
***இனிதே வளைய வந்தேனே !
அருமைத் தம்பி தங்கையுடன் 
***அன்பா யாடிக் களித்தேனே !
துரும்பைக் கூட அசைத்ததில்லை
***சுகமாய்க் காலம் கழித்தேனே !
வரும்நா ளெல்லாம் எப்படியோ 
***வருத்தம் சற்றே தோன்றிடுதே !!  (48)

முல்லைக் கொடியே மயங்காதே 
***முகைகள் பூக்க  வழியனுப்பு !
கொல்லைப் புறத்தில் நின்றிருக்கும் 
***கொய்யா மரமே கலங்காதே !
பல்லால் கடித்துப் பழுக்கவைத்த 
***பாவை யென்னை மறவாதே !
செல்லு மிடத்தில் நிதம்நினைப்பேன் 
***செய்த குறும்பைப் பகிர்ந்திடுவேன் !!  (72)

முற்றந் தெளித்து வண்ணத்தில் 
***முழுதாய்க் கோலம் யாரிடுவார் ?
வெற்றாய் விட்டால் வெதும்பாதே 
***விடுப்பில் வருவேன் அழகூட்ட !
சுற்றி வளர்ந்த வாழைகளே 
***சோர்ந்து விடாதீர் நானின்றி !
நெற்றிப் பொட்டு நிலைத்திருக்க
***நீங்கள் வாழ்த்தி யனுப்பிடுவீர் !!  (96) 

மறக்க வியலா நினைவுகளை 
***மனத்தில் சுமந்தே செல்கின்றேன் !
குறைகள் களைந்து புக்ககத்தில் 
***குணத்தால் எல்லோ ருளங்கவர்வேன் !
பிறரை மதித்துச் சொற்கேட்டுப்
***பெற்றோர் பேரை விளங்கவைப்பேன் !
பிறந்த வீடே போய்வரவா ?
***பிரியா விடையைத் தருவாயே !!  (120)

சியாமளா ராஜசேகர் 

2 comments: