Friday, April 6, 2018

காவிரியின் குரல் ...!!!


தாயென்றே போற்றுகின்றார் தமிழரென்னைப் பாடி
***தரணியெங்கும் போராட்டம் நடத்துகின்றார் கூடி !
சேயென்றே நான்கருதிச் செழிப்பூட்டச் சென்றேன்
***சேவைகளைத் தடுத்ததனால் செயலிழந்து நின்றேன் !
நாயென்று நினையாதே வாலாட்ட மாட்டேன்
***நம்பியோரை ஒருநாளும் கைவிடவே மாட்டேன் !
நீயென்னைத் தடுத்தாலும் நிறைந்தோடி விடுவேன்
***நீதியையும் புறக்கணித்துப் பயணத்தைத் தொடர்வேன் !
பொறுமையுடன் காத்திருப்பேன் புரியாதென் சித்தம்
***பொங்கிடுவேன் ஓர்நாளில் அன்றறிவாய் மொத்தம் !
சிறுமையுற நானென்ன நீசேர்த்த சொத்தா
***சிறுநரியாய்ப் பிதற்றுகின்றாய் உனக்கென்ன பித்தா ?
வறுமையினால் விவசாயி பிணமாகும் போது
***வலிக்கிறதே என்னிதயம் யார்செல்வார் தூது ?
வெறுத்துவிடும் முன்நீயும் களை-கட்டுப் பாட்டை
***வேண்டிடினும் அடங்காமல் ஆடிடுவேன் வேட்டை ...!!!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment