Wednesday, October 28, 2015

தயவுடன் திருந்திடச் செய்வாய் !! ( எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )



முப்புர மெரித்த சங்கரன் மகனே 
***முன்னவ நின்னடிப் பணிந்தேன் !
தப்பெது செயினும் தடுத்திட வருவாய்
***தயவுடன் திருந்திடச் செய்வாய் !
அப்பமும் வடையும் அவலொடு கடலை
***அன்புடன் படைத்திட மகிழ்வாய் !
ஒப்புமை யில்லா உச்சிதத் தேவே
***ஒற்றுமை ஓங்கிட வருளே !

Tuesday, October 27, 2015

தனிமையுணர்வை மாற்றினாள் ....!!



சன்ன லோர இருக்கையில் 
***சாய்ந்துக் கண்ணை மூடினாள்!
என்ன இந்த வாழ்வென
***எரிச்சல் கொண்டு வாடினாள்!

அன்புக் காட்டி மறுத்தவன் 
***அமைதி பறித்துப் போகவே 
சின்ன மனத்தில் வேதனை 
***சிறகு விரிக்க ஏங்கினாள்!

கன்னந் தழுவும் தென்றலால் 
***களைப்பு மெல்ல நீங்கினாள்!
புன்ன கையைத் தொலைத்தவள் 
***புதிதாய் மூச்சு வாங்கினாள்!

தன்கை என்று முதவிடும் 
***தவித்த நெஞ்சைத் தேற்றினாள்!
தன்னம் பிக்கைத் துணைவர
***தனிமை யுணர்வை மாற்றினாள்...!!!

Saturday, October 24, 2015

காதல் பாக்கள் வடிக்குது ....!!!



பட்டுக் கன்னம் தொட்டுத் தீண்டப் 
***பாச நெஞ்சம் துடிக்குது ! 
கட்டிப் போட்ட கையி னாலே 
***காதல் பாக்கள் வடிக்குது ! 
எட்டி நின்று பார்க்கும் கண்ணில் 
***ஏக்கம் மட்டும் தெரியுது ! 
விட்டுச் செல்ல வுள்ள மின்றி 
***வீட்டுக் குள்ளே மறையுதே !! 

(எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ) 
( தேமா தேமா தேமா தேமா 
தேமா தேமா விளம் )

வாழ்வும் சொர்க்க மாயிற்றே ....!!!



காஞ்சிப் பட்டுச் சேலை கட்டிக்  
***காதல் பார்வைப் பார்த்தாளே !
ஊஞ்ச லாடும் உள்ளந் தன்னை 
***ஊற்றாய்ப் பொங்க வைத்தாளே !
தீஞ்சொல் லாலே யீர்த்தா ளென்னை 
***தேனும் தோற்றுப் போயிற்றே !
வாஞ்சை யோடு கட்டிக் கொள்ள 
***வாழ்வும் சொர்க்க மாயிற்றே !

     ( எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )

Tuesday, October 20, 2015

நெஞ்சம் நெகிழும் ...!!! ( அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )

நீலமயில் வாகனனின் திருப்புகழைப் பாடிவந்தால் 
***நெகிழும் நெஞ்சம் !
மாலவனின் மருகனவன் மலர்த்தாளைப் பற்றிடிலோ 
***மயக்கம் தீரும் !
கோலவிழிக் குறமகளும் குறைதீர்க்க உடன்வருவாள் 
***கொழிக்கும் செல்வம் !
வேலவனின் அருள்கிட்ட மேதினியில் சிறப்புற்று 
***விளங்கும் வாழ்வே ! 

Thursday, October 15, 2015

மெல்லச் சென்று மறைந்ததே ....!!!



கொட்டுச் சத்தம் வானில் கேட்டுக் 
***கோலத் திங்கள் பயந்ததோ ?
எட்டிப் பார்த்து மின்னல் பூக்க 
***ஏத்திச் செவ்வாய் மலர்ந்ததோ ?
சொட்டு மாரி போட்ட தாலே 
***சொக்கி மேனி சிலிர்த்ததோ ?
விட்ட பின்னர் மீண்டும் தோன்ற 
***மெல்லச் சென்று மறைந்ததே ....!!!

     ( ஏழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )

Wednesday, October 14, 2015

நீங்கா திருப்பாய் நிறைந்து .....!!! ( அந்தாதி வெண்பாக்கள் )

கருணை விழியால் கனிவுடன் நோக்கி 
வருந்துயர் போக்குவாள் மாரி !- விரும்பி 
வணங்கு மடியவர் வாழ்வி னொளியாய்
இணங்கி யருள்வாள் இனிது . 

இனியவள் காட்டிடும் ஈடிலா அன்பில் 
பனித்திடும் கண்கள் பரிவாய் !- செனித்த 
பிறவியில் தாயவள் பேரருள் கிட்ட 
சிறந்திடும் வாழ்வும் தெளிந்து .

தெளிந்த அறிவுடன் தேவியை எண்ண
எளிதாய் வருவாள் இறங்கி ! - ஒளிரும் 
சுடரிலும் தோன்றியே சூலினி காப்பாள் 
இடர்வரின் சிட்டாய் எழுந்து .

எழுந்தோடி வந்தாய் எளியேனைக் காக்க 
தொழுதவென் துன்பம் தொலைத்தாய் ! - விழுதாகத் 
தாங்கினாய்த் தாயே! தயாபரியே! என்றென்றும் 
நீங்கா திருப்பாய் நிறைந்து .