Monday, June 18, 2018

கலைத்தாயின் தவப்புதல்வன் ....!!!

கலைத்தாயின் தவப்புதல்வன் கலையுலகின் சிம்மமவன்
மலைக்கவைக்கும் ஆற்றலுடன் மனங்கவர்ந்த கள்வனவன்
தலைசிறந்த நடிப்பாலே தமிழருளம் இடம்பிடித்தோன்
நிலைத்திருக்கு மவன்புகழும் நிலம்வானும் உள்ளவரை !
விடிவெள்ளி திரைவானில்! வியக்கவைக்கும் கலைச்செல்வம்!
நடிப்புக்கே நடிப்புதனை நயமாகக் கற்பித்து
நடிப்பாலே உளம்கொய்த நாயகனின் உணர்ச்சிமிகு
துடிப்பான உச்சரிப்பில் சொக்காதோர் யாருமுண்டோ ? .
தரமான நடிப்பாலே தானேற்ற பாத்திரமாய்
வரம்பெற்றுப் பிறர்மனத்தில் வாழ்ந்திருக்கும் இமயமவன்!
வரலாற்று மன்னரையும் மனக்கண்முன் நிறுத்தியவன்
குரலாலே உயிரூட்டிக் கொள்ளையுள்ளம் கொண்டவனே!
அங்கங்கள் ஒவ்வொன்றும் அழகாகத் தான்பேசும்
பொங்கிவரும் உணர்ச்சிவெள்ளம் புதுப்புனலாய்ப் பெருக்கெடுக்கும் !
செங்குருதி யும்நடிக்கும் சீற்றத்தில் துடிக்கையிலே
சிங்கநடை தோற்றுவிடும் சிவாஜிநடை பயில்கையிலே !
வற்றாத கலைஞானம் வாகான முகபாவம்
பற்றோடு செய்தொழிலில் பயபக்தி யுடன்நேசம்
சற்றேனும் செருக்கில்லாத் தகைசான்ற குணசீலம்
பெற்றோனைப் பெற்றதற்குப் பெரும்பேறு பெற்றோமே !
செம்மாந்த தமிழ்பேசித் தெளிவாக வசனங்கள்
கம்பீர மாய்முழங்கி காந்தமெனக் கவர்ந்திழுத்துச்
சிம்மாச னம்போட்டுச் சிங்கார மாய்வீற்ற
நம்நடிகர் திலகத்தை நற்றமிழில் வாழ்த்துவமே !!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment