Monday, June 18, 2018

கன்னிமனம் ஊஞ்சலிலே ....!!!


கன்னிமனம் ஊஞ்சலிலே கனவுகளோ டாடும்
***கண்ணனவன் வருகையினைக் காதலுடன் தேடும் !
புன்னகையு மளவோடு பொன்முகத்தில் பூக்கும்
***பொறுமையுடன் வண்ணமலர்ச் சோலையிலே காக்கும் !
தென்றலிலே குழலசைந்து செவியோரம் மோதும் 
***சிலிர்ப்பினிலே சிவந்துவிட்ட சிறுவிதழ்கள் பேசும் !
அன்னமவள் அழகுகண்டு கவின்சிலையும் நாணும்
***அடங்காத ஆசையிலே இமைதிறந்து பார்க்கும் !
வஞ்சியவள் கனிமொழியில் மலைத்தேனும் தோற்கும்
***வளைகுலுங்கும் கைகளிலே மருதாணி பூக்கும் !
கொஞ்சிவரும் இளங்காற்று வருடிவிட்டுப் போகும்
***குழலோசை மயங்கவைக்க உள்ளமது நோகும் !
மஞ்சுதிரள் கருவானில் ஒளிக்கிளைகள் மின்னும்
***மனத்திலிடி விழுந்தாற்போல் காலிரண்டும் பின்னும் !
நெஞ்சமெலாம் அவன்நினைவே சுற்றிவந்து தாக்கும்
***நீர்க்கோலம் கன்னத்தில் மைவிழிகள் போடும் !
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment