Tuesday, March 19, 2019

வேர்த்திரள் ...!!!


நீடுயர் மரங்கள் மிகுந்துள வனமே
***நிலமகள் வேர்த்திர ளாகும் !!
காடுகள் இன்றேல் நாட்டினில் பாயும்
***கவின்மிகு நதிகளு முண்டோ ?
ஈடிணை யில்லா இயற்கையைச் சிதைத்தால்
***இழப்புகள் நமக்கெனத் தெளிவோம்!
கேடுகள் நீங்கக் கானகம் காத்துக்
***குறைகளைக் களையெடுத் திடுவோம் !
அறிவினுக் கெட்டா அதிசய மாக
அற்புத அழகுடன் விளங்கும் !
உறைவிட மாகும் பல்லுயிர் கட்கும்
***உளவரை உணவையு மளிக்கும் !
குறைவறத் தூய உயிர்வளி தந்து
***குவலயம் குளிர்ந்திடச் செய்யும் !
நிறைமனத் தோடு கானகம் பேண
***நிம்மதி யாய்ப்புவி சுழலும் !
வரையறை யின்றி மரங்களைச் சாய்த்தால்
***வறட்சியில் மண்வளம் குன்றும் !
அரணெனத் திகழும் அணிநிழற் காட்டை
***அழித்திட எண்ணிட லாமா ?
பரவிடும் நெருப்பால் பல்லுயிர் மாயும்
***பகுத்தறி வில்லையோ மனிதா !
வரமெனக் கருதி வனங்களைக் காத்தால்
***வளம்பல பெற்றிட லாமே !!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment