Thursday, March 14, 2019

வண்ணப் பாடல் ...!!!

வண்ணப் பாடல்
************************
சந்தக்குழிப்பு
******************
தத்தத்தன தத்தத் தனதன 
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன . . . . . தனதானா

தித்தித்திடும் முத்துத் தமிழினை
நுட்பத்தொடு கற்றுத் தெளிபவர்
சித்தத்தைநி மிர்த்தித் தருமென . . . . . அறிவாயே
திக்கெட்டிலும் வெற்றிக் கொடியொடு
சுற்றிப்பரி வட்டத் துடனொளிர்
தெப்பத்தொரு செப்புச் சிலையென . . . . . வழகாக
மெத்தப்புகழ் பெற்றுத் தரணியில்
உச்சத்தினை யெட்டித் தொடுமதை
விட்டுச்சிலர் பித்தத் தொடுமனம் . . . . . பிறழ்வாரே !
வெட்கத்தைவி டுத்துப் பிறமொழி
நற்சொத்தென எத்திப் புகழ்பவர்
வித்தைக்கும றுப்பைச் சொலிவிடல் . . . . . முறைதானே !
புத்தித்தெளி வித்துப் பரிவுடன்
பக்கத்திலி ருத்திச் சடுதியில்
பொச்சத்தையு ணர்த்திக் கசடற . . . . . மொழிவாரால்
பொத்தித்தறி கெட்டுத் துணிவொடு
சத்தத்தைய டக்கிச் செறிவுடன்
பொற்பைப்புரி வித்துத் தமிழுட . . . .. னுறவாடும்
பத்தத்தொடு பற்றிக் கொளவது
முட்கட்தமை வெட்டிச் சரிசெயும்
பக்கத்துணை நிற்றற் குரியது . . . . . தமிழ்தானே
பட்டொத்தவு ளத்திற் கனிவுடன்
அச்சத்தைவி ரட்டித் தமிழவள்
பட்டத்தொடு பொற்சித் திரமென . . . . . வருவாளே !!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment