குற்றாலக் குறவஞ்சியில் கொஞ்சும் தமிழ் ...!!!
****************************************************************
அழகாக பச்சையுடை அணிந்தமலை ஈர்க்கும்
***அலையலையாய் மிதந்துசெலும் முகிலைமுட்டிப் பார்க்கும் !
வழுக்கிவிழும் மலையருவி நிலத்திலிடும் முத்தம்
***மனங்குளிரச் செய்யுமந்த இதமான சத்தம் !
பழங்களொடு பூக்களதன் மணம்கொள்ளை கொள்ளும்
***பனிபடர்ந்த இரவுகளில் மதிமயக்கு முள்ளம் !
மழைத்துளிகள் தென்றலொடு தழுவிவிட்டுப் போகும்
***வருடலிலே சுகங்கண்டு சிலிர்க்காதோ தேகம் ??
வழியெங்கும் தொடர்ந்துவரும் மந்திகளின் கூட்டம்
***மரங்களிலே கனிகொய்து தின்றுபோடும் ஆட்டம் !
எழில்சிந்தும் மலையினிலே கருங்குயில்கள் பாடும் !
***எழிலிவரக் கண்டமஞ்ஞை தோகைவிரித் தாடும் !
அழைத்தவுடன் பசுங்கிளிகள் நட்போடு பேசும்
***அஞ்சுகத்தின் கொஞ்சலிலே புரியுமதன் நேசம் !
கிழக்கிலெழும் கதிரொளியில் கவினருவி மின்னும்
***கிளர்ந்தெழுந்த போதினிலே அணிசேர்க்கும் இன்னும் !
குற்றால மலையழகைக் குறவஞ்சி பாடும்
***கொஞ்சிவரும் சந்தத்தில் சலங்கைகட்டி யாடும் !
முற்றாத இளமையொடு தண்டமிழில் பேசும்
***முக்கனியின் சாறெனவே நறுமணமாய் வீசும் !
சொற்களெல்லாம் எளிமையுடன் சொக்கவைக்கும் நெஞ்சம்
***துள்ளலிசை யோடுவந்து படித்திடவே கெஞ்சும் !
நற்றமிழில் இறைமீது பாடியவிப் பாக்கள்
***நயத்தோடு கவிராயர் கட்டிவைத்த பூக்கள் !!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment