Monday, July 16, 2018

பொன்மேனி காட்டாத தென்றல் ...!!!



பொன்மேனி காட்டாத பூஞ்சோலைத் தென்றல்
***பொருநைநதி தவழ்ந்துவந்து பொலிவூட்டும் தென்றல் !
இன்பத்தில் மிதக்கவைக்கும் இதமான தென்றல் 
***இதயங்கள் கலந்தினிக்கும் இளமாலைத் தென்றல் !
அன்புதனைக் காதோரம் கிசுகிசுக்கும் தென்றல் 
***அத்தானின் உள்ளத்தை அள்ளிவரும் தென்றல் !
பொன்னிலவு முற்றத்தில் பூத்திருக்கும் தென்றல் 
***பூரிப்பில் முகிலினத்தை உரசிவிடும் தென்றல் !
மலரிதழில் பனித்துளியை முத்தமிடும் தென்றல்
***மரக்கிளைகள் அசைத்துவிட்டு விளையாடும் தென்றல் !
உலவுகின்ற வழியெங்கும் குலவுகின்ற தென்றல்
***உடைகலைத்தே உற்சாகம் கொள்ளுகின்ற தென்றல் !
மலையருவிச் சாரலுடன் உறவாடும் தென்றல்
***மனங்குளிரச் செய்யுமந்த மணம்மிகுந்த தென்றல் !
தலைவனிடம் தூதுசென்று தவிப்புசொல்லும் தென்றல்
***தயங்காமல் நற்சேதி தாங்கிவரும் தென்றல் !
மழைத்தூறல் போடுகையில் கொஞ்சிவரும் தென்றல்
***மண்வாசம் அந்நேரம் மலர்விக்கும் தென்றல் !
அழையாது விட்டாலும் அரவணைக்கும் தென்றல்
***ஆசையுடன் கேட்டாலும் முகம்காட்டாத் தென்றல் !
உழைப்போர்கள் வியர்வையினை உலரவைக்கும் தென்றல்
***உருவமில்லை என்றாலும் உணரவைக்கும் தென்றல் !
கழனியிலே நெற்கதிரைத் தாலாட்டும் தென்றல்
***கவியெழுதும் பாவலர்க்குக் கருவான தென்றல் !!
திறந்திருக்கும் சாளரத்தில் நுழைந்துவரும் தென்றல்
***தேன்நிலவின் தண்ணொளியைத் துணைக்கழைக்கும் தென்றல் !
சிறகின்றிச் சுற்றிவந்து சிலிர்க்கவைக்கும் தென்றல்
***தீண்டுகையில் சொர்க்கத்தைக் காட்டிவிடும் தென்றல் !
உறங்கவைத்துச் சோர்வகற்றிச் சுகம்கொடுக்கும் தென்றல்
***உச்சிவெயில் வேளையினில் ஓய்வெடுக்கும் தென்றல் !
இறைவனது படைப்பினிலே வரமான தென்றல்
***இளவேனில் காலத்தில் வீசுகின்ற தென்றல் !!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment