Monday, July 16, 2018

பிறந்தநாள் வாழ்த்து பிரனீத் குட்டிக்கு ...!!!( ஜூன் 30)

பிறந்தநாள் வாழ்த்து ....!!!
***********************************
தத்தித் தத்தி நடைபயின்று
***தங்க ரதம்போல் வளையவந்து
கொத்து மலராய் இதழ்விரித்துக் 
***கொஞ்சிக் கொஞ்சிச் சிரித்திடுவான் !
முத்துச் சிப்பித் திறந்தாற்போல்
***முத்த தாலே உயிர்நனைப்பான் !
பித்தா யென்னை யாக்கிவைத்தப்
***பிரிய பெயரன் இவனன்றோ??
கண்ணில் பட்ட பொருளெல்லாம்
***கையால் இழுத்துப் போட்டிடுவான் !
உண்ண கொஞ்சம் அடம்பிடிப்பான் !
***ஊட்டி விட்டால் துப்பிடுவான் !
தண்ணீர் கண்டால் கொண்டாட்டம்
***தட்டித் தட்டி ஆடிடுவான் !
வண்ண வண்ண மின்னொளியில்
***மயங்கி மகிழ்ந்து புன்னகைப்பான் !
அடுக்கி வைத்த துணிகளெல்லாம்
***அடுத்த நொடியில் கலைத்திடுவான் !
எடுத்து வைத்து முடிப்பதற்குள்
***எழுந்து மீண்டும் உலைத்திடுவான் !
தடுத்தால் ஓடி ஒளிந்திடுவான்
***தாயின் மடியைத் தேடிடுவான் !
படுக்க வைத்துத் தாலாட்டப்
***பைய இமைகள் மூடிடுவான் !
கண்ணின் இமையாய்க் காத்திருந்து
***கனிவாய்ப் பேணும் தந்தைமுகம்
கண்ட வுடனே அன்பொழுக
***காலைச் சுற்றி வந்திடுவான் !
வண்ண பொம்மை கொடுத்திடிலோ
***வாங்கித் தூர எறிந்துவிட்டுத்
தண்டை குலுங்க ஓடிவந்து
***சட்டிப் பானை உருட்டிடுவான் !
அல்லும் பகலும் பாட்டில்தான்
***அவனின் பொழுது நிதம்கழியும் !
கல்லைக் கூட கனிவிக்கும்
***கன்னல் பேச்சில் மதுவழியும் !
செல்லக் கண்ணன் செய்கின்ற
***சேட்டை அதிக மென்றாலும்
வெல்லும் வித்தை அறிந்திருக்கும்
***வெல்லக் கட்டி இவன்தானே !
வருட மொன்று பறந்துவிட
***வளர்ந்து விட்டான் அழகாக !
விருந்தாய் அன்பை நொடிதோறும்
***விடாமல் பொழிவான் மழையாக !
வருத்தும் துன்பம் யாவுமிவன்
***வதனம் பார்த்தால் மறைந்துவிடும் !
விரும்பும் மனமும் என்றென்றும்
***விருத்தத் தாலே வாழ்த்துரைக்கும் !
இவன்தான் அவனே என்றிருந்தேன்
***இதயச் சிலிர்ப்பில் நெகிழ்ந்திருந்தேன் !
கவலை மறக்கக் காரணமாய்க்
***கடவுள் தந்த வரந்தானோ !
துவண்ட போதில் என்றனுளச்
***சுமையைக் குறைக்க வந்தவனை
உவகை பொங்க வாழ்த்திடுவேன்
***உலகம் மெச்ச வாழியவே ...!!!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பிரனீத் குட்டி 💐💐💐❤️❤️❤️🎂🎂🎂🎉🎉🎉🎈🎈🎈

No comments:

Post a Comment