Monday, July 16, 2018

அன்பு மகனே !


உலவும் காற்றில் கலந்தாயோ
***உலகைத் தாண்டிப் பறந்தாயோ ?
நிலவைத் தொட்டுப் பார்த்தாயோ
***நினைக்க எம்மை மறந்தாயோ ?
கலங்கி யழுதும் இரங்காயோ
***கனவில் முகத்தைக் காட்டாயோ ?
நலமாய் எம்மை வழிநடத்த
***நமனின் பின்னே சென்றாயோ ??

இரண்டு வருடம் உருண்டோட
***இதயம் இறுகிக் கிடக்கின்றேன் !
வரமாய்க் கிடைத்த மகனுன்னை
***மனத்துள் ளிருத்தித் துதிக்கின்றேன் !
உருவம் மறைந்து போனாலும்
***உள்ள முருகி அழைக்கின்றேன் !
அருவ மாக அருகிருந்தே
***அனைத்தும் நடத்த விழைகின்றேன் !
நினைத்த போது கண்முன்னே
***நிழலாய்க் கூட வரவேண்டும் !
மனத்தின் சுமைகள் போக்குதற்கு
***வழியைக் காட்டித் தரவேண்டும் !
கனலாய் நெஞ்சம் கொதிக்கையிலே
***கனிவாய்க் குளிரச் செயவேண்டும் !
உனையே எண்ணும் அன்னையுளம்
***உன்னைக் காணும் வரம்வேண்டும் !
சிரித்து வெளியில் நடித்தாலும்
***தேம்பி யுள்ளே அழுகின்றேன் !
பிரிந்து சென்ற தேனென்றுப்
***பித்தாய் நாளும் கேட்கின்றேன் !
மரிக்கும் வயதா உன்றனுக்கு
***மகனே பதில்சொல் இக்கணமே !
விரிந்த விண்ணி லிடம்பிடித்தாய்
***விரைவி லழைப்பா யென்னையுமே !!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment