Wednesday, May 24, 2017

பாசத்தால் நனைத்தவளே ....!!!

அம்மாவுன் பாசத்திற்(கு) அளவுகோல் உலகிலில்லை 
விம்மியழும் நெஞ்சத்திற்(கு) ஆறுதல் வேறாருமில்லை !

பட்டம்நான் பெற்றுவிட்டால் பட்டதுயர் போகுமென்று 
பட்டணத்தில் படிக்கவைக்கப் பாரத்தைச் சுமந்தாயே !
கட்டியவன் போனாலும் கண்ணீரைத் துடைத்துவிட்டுத்
தட்டாமல் கேட்டவற்றைத் தயவுடனே  அளித்தாயே !    (அம்மாவுன் )

பத்துமாதம் சுமந்தவளே ! பாசத்தால் நனைத்தவளே !
உத்தமியே எனக்காக உருக்குலைந்து போனாயே !
சொத்துபத்து அத்தனையும் துடைத்தெடுத்து விற்றுவிட்டாய் 
எத்தனையோ அல்லலுற்றாய் எனக்காகப் பொறுத்தாயே !    ( அம்மாவுன் )

வேலையேதும் கிடைக்கவில்லை விதியைநொந்து பலனுமில்லை 
சோலைமலர் மணக்கவில்லை சோகமதை மாற்றவில்லை 
தாலாட்டி வளர்த்தவளைத் தவிக்கவிட எண்ணமில்லை 
பாலைவனம் போலவுள்ளம் பசுமையின்றித் துடிக்கிறதே !    ( அம்மாவுன் )

ஓயாமல் தேடுகிறேன் உழைப்பதையே வேண்டுகிறேன் 
நாயாகத் திரிக்கின்றேன் நல்லபணி கிட்டவில்லை 
தாயாரைக் காப்பாற்ற தனயனுக்குக் கடமையுண்டே
ஆயாசம் தானடைந்தேன் ஐயோநான் என்செய்வேன் ???      (அம்மாவுன் )

சியாமளா ராஜசேகர் 




No comments:

Post a Comment