Friday, February 17, 2017

காதல் சுவாசம் .....!!!




விழிகளில் விழுந்து மனத்தினுள் நிறைந்து 
***விருட்சமாய்க் காதலும் வளரும் !
மொழிகளும் மறந்த இதயமும் சிலிர்க்க 
***முகமதும்  நிலவென ஒளிரும் !
பொழிந்திடும் மழையாய்ப் புத்துணர் வூட்டிப் 
***புதுமைகள் புரிந்திடும் நிதமும் !
எழிலுற விளங்கும் இளமையின் துடிப்பில் 
***எழுதிடும் கவிதையில் உருகும் !

பளிங்கென மின்னும் கதிரொளி தன்னில் 
***பனித்துளி சிரிப்பதைப்  போலே
களிப்புறும் நெஞ்சம் கவலைக ளின்றிக்
***கற்பனைச் சிறகினை விரிக்கும் !
ஒளிர்ந்திடும் சுடரின் அழகினை யொப்ப 
***உளமதில் பொன்னொளி பரவும் !
தளிரெனத் துளிர்த்துக் கனிந்திடும் காதல் 
***தனிமையில் கனவினில் மிதக்கும் !  

காதலில் திளைக்கும் காளையர் உள்ளம் 
***கன்னியின் பார்வையை விரும்பும் !
காதலைச் சொல்ல வார்த்தைகள் வற்றக்
***கண்களால் காவியம் பேசும் !
காதலே சுவாசக் காற்றெனக் கொண்டு 
***காலமும் வாழ்ந்திடத் துடிக்கும் !
காதலின் நேசம் கலங்கரை விளக்காய்க்
***காட்டிடும் வழியினை நன்றே !!!

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment