Thursday, February 16, 2017

வீணையில் விரல்களாய் எனைமீட்டு....!!



மோகனைப் புன்னகை வீசிடும் நிலவே 
***முத்தொளிர் கண்களால் கதைபேசு ! 
தேகமும் சிலிர்த்திடத் தென்றலின் சுகத்தில் 
***சில்லென நீயொரு கவியெழுது ! 
மேகமும் திரண்டிட மழைவரும் பொழுதில் 
***மெல்லிதழ் சிவந்திடக் கனிவோடு 
வேகமாய்க் கைவளைக் குலுங்கிட அணைத்து 
***வீணையில் விரல்களாய் எனைமீட்டு ! 

மார்கழிக் குளிரினைத் தாங்கிட முடியா 
***மன்னனின் நிலைதனை உணராயோ ? 
போர்வையுள் இருமனம் பேசிடும் தருணம் 
***பொங்கிடும் உணர்வினை அறிவாயா ? 
மார்பொடு தழுவிட ஏங்குதென் இதயம் 
***மங்கையே அணைத்திட மறுப்பாயா ? 
பார்வையால் கொஞ்சிடும் பாவையே எனக்குப் 
***பஞ்சணை சுகமதைத் தருவாயா ? 

கொண்டையில் மல்லிகைப் பூச்சரம் மணக்கக் 
***கொஞ்சிட உள்ளமும் துடிக்கிறதே ! 
வண்டென விழிகளின் வசியமும் கவர 
***வஞ்சியுன் அழகினை ரசிக்கிறதே ! 
பெண்மயில் அருகினில் இருக்கையில் மனமும் 
***பெருமையில் துள்ளியே குதிக்கிறதே ! 
கண்மணி காதலால் உருகிடு மெனக்கு 
***கருணையாய்க் கடைக்கண் திறப்பாயே !

No comments:

Post a Comment