Friday, February 17, 2017

அந்தாதி - இயற்கை !

முகிலுக்குள் முகம்மறைத்து முழுநிலவும் விளையாடும் 
விளையாடும் வேளையிலே விண்மீன்கள் விழிசிமிட்டும் 
விழிசிமிட்டும் ஒளிகண்டு வெட்கத்தில் மதிசிலிர்க்கும் 
மதிசிலிர்க்கும் எழில்தனிலே மனம்மயங்க கவிபிறக்கும் !

கவிபிறக்க அதைப்படித்துக் கன்னிமனம் கனிந்துவிடும் 
கனிந்துவிடும் காதலினால் கனவுகளும் மிதந்துவரும் 
மிதந்துவரும் தென்றலிலே மெலிதான மணம்பரவும் 
மணம்பரவ இருக்குமிடம் மலர்வனமாய் அழகாகும் !

அழகான மலையினிலே அருவிகளும் பெருகிவரும் 
பெருகிவரும் நதியலையில் பிரியமுடன் கயல்துள்ளும் 
கயல்துள்ளும் விழியிரண்டும் காந்தமென கவர்ந்துவிடும் 
கவர்ந்துவிடும்  வான்மழையும் கலந்துவிடும் கடலினிலே !

கடலினிலே குளித்தெழுந்து கதிரவனும் தினமுதிக்கும் 
தினமுதிர்த்து மறைந்துவிட திங்களதும் இருள்விலக்கும் 
இருள்விலகும் ஒளியினிலே இயற்கையுந்தான் மிகவழகே 
மிகவழகாய்த்  திரைவிலக்கி மிளிரவைக்கும்  வெண்முகிலே !

No comments:

Post a Comment