Sunday, December 3, 2017

கைகேயி...!!!


கேகய நாட்டின் மன்னனின் மகள்,கை 
***கேயியின் இருவரங் களினால் 
சோகமே உருவாய்த் தசரதன் தானும் 
***துடித்தனன் ஐம்புலன் ஒடுங்க
வேகம டங்கும் வேழமாய்த் தரையில் 
***வீழ்ந்தனன் வேதனை முற்றித் 
தோகையள் ஐயன் அல்லலைக் கண்டும் 
***துணைவனை அலட்சியம் செய்தாள் !

சந்ததம் இராமன் நலனையே கருதிச் 
***சகலமும் காத்திடும் நங்கை 
மந்தரை யென்ற கொடுமனக் கூனி 
***வார்த்தையில் தன்னுளம் மயங்கித்
தந்திர மாக முன்பொரு நாளில் 
***தயரதன் தருவதாய்ச் சொன்ன 
சிந்தையில் நிறுத்தி இருவரங் களையும் 
***செருக்குடன் பெற்றனள் கேட்டு !

சீர்மிகு செல்வன் ஏழிரண் டாண்டு
***சிறப்புடன் கானகம் ஏகப் 
பார்புகழ் வண்ணம் பரதனும் ஆளப் 
***பத்தினி வரங்களைக் கேட்டுக் 
கூர்சொலால் மன்னன் உள்ளமும் வெதும்பிக் 
***கொதித்தனன் உலைக்கல மாகத்
தேரென நிமிர்ந்த நடையினைக் கொண்ட 
***திருவுரு சாய்ந்ததே உடனே !

விதிப்படி நடந்த நாடகந் தன்னில் 
***வினைப்பயன் முழுமையும் ஏற்றாள்!
மதியினால் கண்டு மயக்கமும் தெளிந்தே 
***வனிதையும் வரங்களைக் கேட்டாள்!
பதியையும் காக்கத் தாய்மையின் அன்பால்
***பழியினைச் சுமந்தனள் தானே !
புதிரென விளங்கும் பூவெழில் மங்கை 
***புனிதையை வாழ்த்திடு வோமே !!

சியாமளா ராஜசேகர் 

Monday, November 27, 2017

கதைபேசும் கண்கள் ....!!!

கதைபேசும் கண்களிலே காதல் ஏக்கம் 
      கனிவான பார்வையிலே அகமும் பூக்கும் !
இதயத்தின் ஓசைதனை விழிகள் மீட்டும் 
     இமைமூடி யிருந்தாலும் இதமாய்க் காட்டும் !
முதலாக எண்ணத்தை எடுத்துச் சொல்லும் 
     மொழியின்றி மௌனத்தால் மனத்தை வெல்லும் !
வதனத்திற் கழகூட்டி வசியம் செய்யும் 
     மையிட்ட கண்ணிரண்டும் நெஞ்சைக் கொய்தே !!

சியாமளா ராஜசேகர் 

Saturday, November 25, 2017

எங்கோ இசைத்த பாடலிலே ....!!!



எங்கோ இசைத்த பாடலிலே 
      இதயம் அமைதி கொண்டதடி !
மங்கை யுன்றன் குரல்போலும் 
     மனதை மயங்க வைத்ததடி  !
வங்கக் கடலின் அலையொலியாய் 
     வசியம் செய்து சென்றதடி !
சங்கத் தமிழின் இனிமையைப்போல் 
     சந்தம் கொஞ்சி அணைத்ததடி  !

தனிமை வாட்டும் வேளையிலே 
     தாகந் தீர்க்கும் சுகவிருந்தாய் 
வனிதை உன்றன் தேன்குரலும் 
     வளைய வந்து மோதுதடி !
பனியாய் உருகச் செய்ததடி 
     பன்னீர் மணமாய் நிறையுதடி !
கனிவாய் நெஞ்சை வருடுதடி  
     காற்றில் மெல்லக் கலந்துவந்தே !

தேனை யுண்ட வண்டிசையோ
       தென்றல் பாடும் ராகமிதோ
மீனை யொத்த விழியுடையாள்
      மீட்டும் மதுர கானமிதோ
மோனை எதுகை நயத்தோடு
     முழங்கும் கவிதைப் பாச்சரமோ 
ஊனை யுருக்கி விட்டதடி 
     உள்ளம் உரசிக் கொன்றதடி !

யாழின் இசையும் தோற்குதடி 
      என்றன் நிலையை என்சொல்ல ?
சோழி உருட்டி விட்டாற்போல் 
     சொக்கிச் சிலிர்க்க வைத்ததடி !
தோழி! நீயென் அருகிருந்தால் 
     சோகம் யாவும் மறைந்துவிடும் !
வாழி என்று வாழ்த்திசைக்க 
     வருவாய் வண்ணக் கனவினிலே !!

சியாமளா ராஜசேகர் 

Friday, November 24, 2017

செல்லத் தங்கமே ...!!!


பட்டுவண்ண ரோசாவே 
     பாசமுள்ள பைங்கிளியே !
சிட்டைப்போல் சிரிப்பினிலே 
     சித்திரமா சொலிப்பவளே !
சுட்டுவிரல் பிடித்தபடி 
     சுத்திவரும் சுந்தரியே !
மொட்டுவொண்ணு விரிந்தாற்போல் 
     முத்தத்தில் மலர்ந்தாயே !!

அப்பான்னு அழைக்கையிலே 
     ஆயிரம்பூ பூத்ததம்மா !
உப்புமூட்ட சுமந்தபடி 
    ஊர்சுத்திக் காட்டிடுவேன் !
சொப்புவச்சி விளையாடச் 
     சொல்லிநானும் தந்திடுவேன் !
எப்போதும் ஒன்நினைப்பே 
      இனிக்குதம்மா நெஞ்சினிலே !!

கால்கொலுசு சத்தத்தில்
      கண்முழிச்சிப் பாத்திடுவேன் !
பால்வாங்கி வந்துனக்குப்
     பக்குவமா கொடுத்திடுவேன் !
சேல்கெண்டை மீனாட்டம் 
     சேட்டையிலே துள்ளுறியே !
மேல்விழுந்து நீயாட 
     மேனியெல்லாம் சிலிர்க்குதம்மா !

ரெட்டசடை போட்டுவிட்டு 
     ரிப்பனையும் கட்டிவிட்டு 
சுட்டியுன்ன பாடசாலை 
    சுமந்துகொண்டு போவேனே !
அட்டைப்போல் ஒட்டியேநீ
     அடம்பிடித்தால் ஆகாதே !
கட்டிவெல்லத் தங்கமேநீ 
      கலங்காம செல்லமேபோ !!

சியாமளா ராஜசேகர்  

வீரமங்கை வேலுநாச்சியார் ...!!!



வீரத்தின் விளைநிலமாம் சிவகங்கை யாண்ட 
***வீரமங்கை  வேலுநாச்சி யாரென்னும் ராணி! 
பேரழகுப் பெண்மயிலாள் இளம்வயதி லேயே
***பிறமொழிகள் பயின்றதுடன் இலக்கியமும் கற்றாள்!
பூரணமாய்ப் போர்க்கலைகள் பலவற்றில் தேர்ந்தாள்
***புலிபோலும் வீரத்திற் சிறந்தாளைக் கண்டு 
தீர(ன்)முத்து வடுகநாதன் காதலிலே மூழ்கித் 
***திருமணமும் செய்துகொண்டான் வேலுநாச்சி யாரை !

ஆங்கிலேயப் படையெடுப்பில் வஞ்சகமாய்க் கொன்ற 
***அன்பான தன்பதியின் இறந்தசெய்தி கேட்டுத்
தாங்கொணாத துயராலே உடன்கட்டை ஏறித் 
***தன்னுயிரை மாய்த்திடவே முடிவுசெய்தாள் அவளே !
வேங்கையென வெகுண்டெழுந்து பழிவாங்கச் சொன்ன 
***வீரமருது சகோதரர்கள் அமைச்சருடன் சேர்ந்து 
தீங்கிழைத்த எதிரிகளைத் தீர்த்திடவே எண்ணி 
***திண்டுக்கல் கோட்டைக்குப் பாதுகாப்பாய்ப் போனாள் !

ஆண்வேட மணிந்துசென்று  படையுதவி கேட்க 
***ஐதரலி படைகளையும் உடனனுப்பி வைத்தான் !
மூண்டெழுந்த போருக்காய் உயிர்த்தியாகம் செய்ய 
*** முனைந்திட்ட குயிலியுமை யாள்வீரம் பெரிதே !
மீண்டிடவே முடியாமல் எதிரிகளும் தோற்க 
***வெற்றிவாகை சூடிநின்ற தமிழச்சி தானும்
வேண்டியவர் தன்னிடத்தில் மண்டியிட்ட  தாலே
*** வீரமங்கை மன்னித்தாள்  உயிர்ப்பிச்சை தந்தே !!

சியாமளா ராஜசேகர் 


அன்பின் சின்னம் ....!!!



எழில்கொஞ்சும் அதிசயங்கள் ஏழுள் ஒன்றாய்
***யமுனைநதிக் கரையினிலே வியக்கும் வண்ணம்
அழிவில்லாக் காதலுக்கு சாட்சி யாக
***அகிலத்தில் சிறப்புமிக்க அன்பின் சின்னம்!
பொழிந்தவன்பின் ஆலயமாய்க் கட்டப் பட்ட
***புனிதமான கலைக்கூடம் இஃதே யன்றோ?
விழிவிரிய வைத்திடுமே வேலைப் பாடு
***வெண்பளிங்கு மாளிகைக்கிங் கில்லை யீடே!
சியாமளா ராஜசேகர்

Tuesday, November 21, 2017

குடும்பத்தில் மகிழ்ச்சி பெருக ....!!!


குடும்பத்தில் பெருமகிழ்ச்சி நிலவவேண்டு மென்றால் 
***குறைவில்லாப் பாசமொன்றே  இன்பத்தைக் கூட்டும்  !
கொடுப்பதனால் அழியாத அன்பென்னும் பண்பைக்
***கொண்டிருப்போர் இல்லத்தில் ஆனந்தம் பூக்கும் !
கடுகளவும் சந்தேகம் உட்புகாத வண்ணம்  
***கருணையுடன் அன்பொன்றே அரணாகக் காக்கும் !
தடுமாற்ற மில்லாமல் பயணத்தைத் தொடர 
***தன்னலமில் லாஅன்பே தாயைப்போல் தாங்கும் !

பணமிருந்தும் ஏதோவொன் றிழந்தாரைப் போலப்
***பாசத்திற் கேங்குவோரும் பாரினிலே உண்டே !
உணர்வுகளை வெளிக்காட்டாப் பாசத்தால் கூட 
***உபயோக மில்லையென்றே உணர்ந்திடுவீர் நன்றே !
பிணக்கில்லா வாழ்விற்கு வழிவகுக்கும் அன்பால்
***பேரின்ப மடைந்திடலாம் பிடிவாதம் கொன்றே !
வணக்கத்திற் குரித்தான குணநலனெ தென்றால் 
***மகிழ்ச்சியினை மலரவைக்கும் பாசமென்ற வொன்றே !!

உரிமையான இடத்தினிலும் கோபம்தான் சாபம் 
***உறவுகளின் மேன்மையினை வலுப்படுத்தும் நேசம் !
புரிந்துணர்வு கொள்வதற்கோ உள்ளத்தில் பாசம் 
***பூத்தால்தான் நிறைந்திருக்கும் அகம்முழுதும் வாசம் !
கரியமில வளிநுகர்ந்தால் திணறாதோ சுவாசம் 
***கடுஞ்சொற்கள் உமிழ்ந்துவிட்டால் விளைந்திடுமே நாசம் !
பரிவான வார்த்தைகளே தென்றலாக வீசும் 
***பக்குவமாய் உணர்ந்துகொண்டால் பெருமகிழ்ச்சி சேரும் ! 

கூட்டாக வாழ்ந்திருந்த நிலையிங்கின் றில்லை 
***கோடிகளில் புரண்டாலும் பாசமின்றேல் தொல்லை !
வாட்டமுற்ற மனத்திற்குப் பாசந்தான் மருந்து 
***வாழ்வினிலே ஆனந்தம் அளிக்கும்நல் விருந்து ! 
ஆட்டுவிக்கும் ஆசைகளால் அழிவுதானே மிஞ்சும் 
***அன்புமனம் கனிந்துவிட்டால் மகிழ்ச்சியங்கே தஞ்சம்  !
வீட்டிலுள்ளோர் உள்ளங்கள் பாசத்தால் விரிந்தால் 
***விடைபெற்றுச் சென்றிடுமே துன்பங்கள் விரைந்தே !!