Tuesday, June 23, 2015

வென்றாயெம் உள்ளம் ...!!!




கன்னத்தில் வைத்திட்ட கண்திருஷ்டிப் பொட்டுடன்
சின்னப்பெண் உந்தன் சிரிப்பும் கவர்ந்திழுக்க
மின்னும்வெண் பற்களும் வெட்டியெழில் கூட்டிட 
வென்றாயெம் முள்ளம் விழைந்து 

இணையத் தமிழே இனி ....!!



இணையத் தமிழே இனிய வரமாம் 
துணைவரும் என்றென்றும் துய்க்க - இணையிலாத் 
தன்மையால் தாயாய்த் தரணியை ஆண்டிடும் 
தொன்மைத் தமிழே தொடர்ந்து .

வியக்கும் வகைதனில் விஞ்ஞான ஞானம் 
உயர்த்தும் தொழில்நுட்பம் ஓம்பி - நயமாய் 
இதழ்கள் வெளியாகி ஏற்ற மளிக்கும் 
முதன்மையாய்த் தோன்றும் முனைந்து .

காலத்திற் கேற்ற களமாய் இணையமே 
ஞாலத்தில் நல்லறிவை நாட்டிடும் - நூலகமாய்ப் 
புத்தியைத் தீட்டிப் புதுமைகள் செய்விக்கும் 
சத்தாம் இணையத் தமிழ் . 

அழியா நிலையை அடைந்தேப் பொலிவாய்த் 
தழைக்கும் இணையத் தமிழே ! - மொழியிற்
சிறந்தே பவனிவரும் சீராய் உலகில் 
இறவாப் புகழினை ஏற்று .

கறையான் அரிக்காது; கள்வன் திருடான் 
நிறைவாய் வளரும் நிதமும்  - முறையாய்  
அணையாகக் காக்கும்; அறிவியல் பேசும்  
இணையத் தமிழே இனி .


            (ரூபன் & யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி -2015 ல் மூன்றாம் இடம் பெற்ற கவிதை இது )

Monday, June 22, 2015

மயங்கி மனம் குளிரும் ...!!!



பொதிகைத் தென்றல் தவழ்ந்து வந்து 
****பொருநை நதிசேரும் ! 
நதியி லாடும் அலைக ளெல்லாம் 
****நல்ல தமிழ்பாடும் ! 
சுதியும் கூட்டும் மீன்கள் கூட்டம் 
****சுற்றி விளையாடும் ! 
மதியும் அந்திப் பொழுதில் கண்டு 
****மயங்கி மனங்குளிரும் ...!!!

Sunday, June 21, 2015

கள்ளின் போதை தந்திடுமே ....!!



ஆற்று நீரில் துள்ளும் மீன்கள் 
****ஆளைக் கண்டால் ஓடிடுமே ! 
காற்று வீசப் பூக்கள் வாசம் 
****கள்ளின் போதை தந்திடுமே ! 
சீற்றம் கொண்ட மேகம் யுத்தம் 
****செய்யும் சத்தம் கேட்டிடுமே ! 
தோற்றுப் போன தாலே வானம் 
****தூறல் கண்ணீர் சிந்திடுமே ...!!! 

அழிப்போம் சீமைக் கருவேல மரத்தை !



சீமைக் கருவேலம் சீரழிக்கும் மண்வளத்தை 
தீமை விளைவிக்கும் தேவையின்றி - ஊமையாய் 
நின்றே உறிஞ்சும் நிலத்தடித் தண்ணீரை 
நன்றாய் துளிர்த்திடும் நஞ்சு . 

அடர்ந்து வளர்ந்திடும் ஆக்கிர மிக்கும் 
படர்ந்து செழித்துப் பரவும் - விடமாய் 
அமைந்த கொடுமுள்ளால் ஆபத்தும் நேரும் 
குமையும் மனமும் கொதித்து . 

உயிர்வளியை சொற்பமாய் உற்பத்திச் செய்யும் 
உயிரினங்கள் வாழ உதவா - பயிர்கள் 
விளையவிடா காட்டு விடத்தருவை நாமும் 
சளைக்காமல் வெட்டிடுவோம் சாய்த்து . 

மண்ணின் எதிரியை மண்ணைவிட்டேப் போக்கிட 
கண்மூடி வெட்டிக் களைந்திடுக - எண்ணிடவே 
அச்சம் விளைத்தே அபாயமளிக் கும்மரத்தை 
மிச்ச மிருக்காமல் வெட்டு .

வெட்கம் ஏனடியோ ....??



வெள்ளை ரோஜா புன்ன கைக்க 
****வெட்கம் ஏனடியோ ?
கிள்ளை கூண்டில் கொஞ்சும் பேச்சைக் 
****கேட்டுப் பாரடியோ !
கள்ள மில்லா பிள்ளை முத்தம் 
****கன்னல் தானடியோ !
உள்ளம் கொள்ளை கொள்ளு மிந்த
****உண்மை தேனடியோ !

Saturday, June 20, 2015

தனிமையுடன் நாளைத் தள்ளிடுவேன் அன்பே !!



பெண்ணுன்னைப் பார்த்தேன் 
****பிரமித்து நின்றேன் ! 
கண்பார்த்துப் பூத்தேன் 
****காதலிலே வீழ்ந்தேன் ! 
எண்ணற்றப் பாக்கள் 
****ஏக்கமுடன் யாத்தேன் ! 
வண்டாக உன்னை 
****வட்டமிட்டு வந்தேன் ! 

தென்றலெனத் தவழ்ந்தாய் 
****தெவிட்டாமல் இனித்தாய் ! 
பொன்னென்று நினைத்தேன் 
****புன்னகையால் கொன்றாய் ! 
மின்னலென ஒளிர்ந்தாய் 
****மின்வெட்டாய் மறைந்தாய் ! 
என்னென்று சொல்வேன் 
****ஏமாற்றம் தந்தாய் ! 

கனிந்திட்ட நெஞ்சம் 
****கசந்ததுவும் ஏனோ ? 
அனிச்சமலர் போலே 
****அகம்வாட லாமோ ? 
இனியென்றன் வாழ்வில் 
****இடம்பெண்ணுக் கில்லை ! 
தனிமையுடன் நாளை 
****தள்ளிடுவேன் அன்பே ...!!!