Tuesday, January 12, 2021

வண்ணம் -107

 வண்ணம் 107

***************
தனதன தானன தனதன தானன
தனதன தானன தனதானா ( அரையடிக்கு )
அறுபடை வீடுடை அறுமுக நாதனு(ன்)
அழகிய வேலினை நிதம்பாடி
அலைகளு மாடிடும் நுரைமலர் தூவிடும்
அகமகிழ் வோடினி துறவாடும் !
நறுமலர் மாலைக ளொடுமணி யாரமும்
நனியெழில் மேனியி லொளிவீச
நமனொடு போரிடு மடியவர் பேணிட
நடமிடு மாமயி லினில்வாராய்!
குறைகளை வாயென விழிகளில் நீரொடு
குமுறிடு பேதையர் வினைதீராய்
கொடியிடை யாளது குழையணி காதொடு
குலவிடு நேயனு னடிபேணும்
வறுமையில் வாடிடு மெளியவர் வாழ்வினில்
வதைபட வேயினி விடலாமோ
மழைவரு வேளையில் மயில்களு லாவிடு
மலைமிசை மேவிய பெருமாளே!
சியாமளா ராஜசேகர்
பாடியவர்.... அமெரிக்காவில் வசிக்கும் திரு. சங்கர ஐயர் அவர்கள்

வண்ணம் -106

 தத்தத் தத்தத் தனதானா

தத்தத் தத்தத் தனதானா

மத்தத் திற்சுற் றிடுவோனால்
மட்டுப் பட்டுத் தவியாமல்
சுத்தத் தைப்பெற் றிடவேதான்
சுற்றிச் சுற்றித் தொழுவேனே
சித்தத் திற்குக் கனிவோடே
திட்பத் தைச்செப் பியநாதா
நத்திக் குட்டிப் பணிவேனே
நச்சுத் தொற்றைக் களைவாயே!
சியாமளா ராஜசேகர்

ஹைக்கூ


 பசிக்கொடுமை

அதிகரித்துக் கொண்டிருக்கிறது
கொரானா பயம்!
&&&&&&&&&&&&&&&
புழுதி பறந்தது
ஆடிக் காற்றில்
மொட்டையானது மரம்!
&&&&&&&&&&&&&&
ஆடித் தள்ளுபடி
அமர்க்களப்படுகிறது
இணையத்தில் கவியரங்கம்
&&&&&&&&&&&&&&&&&
காட்டுத்தீ
கொளுந்துவிட்டு எரிகிறது
சாதிக் கலவரம்
&&&&&&&&&&&&&&&&

வண்ணம் - 105



தத்தத் தனான தனதான
தத்தத் தனான தனதான
முத்துக் குமார வடிவேலா
முட்டுப் படாது புகழ்பாட
முத்திக் குஞான மருளாயேல்
முற்றுப் பெறாது புவிவாழ்வே!
மொத்தத் திலாசை விடுவேனோ
முக்கட் பிரானி னெழில்நேசா
சித்தத் துளாடு மழகேசா
தித்திக் கவாசி யருள்வாயே!!
சியாமளா ராஜசேகர்

வண்ணம் -104

 வண்ணம் 104

************
தனத்த தாத்தந் தனதானா
தனத்த தாத்தந் தனதானா
கருப்பர் கூட்டங் களைவாயே
கனத்த வேற்கொண் டெறிவாயே
விரட்டி யோட்டும் படைவீரா
வியப்பி லாழ்த்துந் தணிகேசா
வருத்தம் போக்குந் திறலோனே
வளத்தை யூட்டுங் கனிவோடே
சிரத்தை யாட்டுந் தமிழ்வேளே
சிரித்து மாற்றந் தருவாயே!
சியாமளா ராஜசேகர்

என் சொல்ல

மலர்களைப் பார்த்தேன் மணத்துடன் குலுங்கி

     மகிழ்வுடன் சிரித்தது செடியில்!

அலைகளைக் கண்டேன் அச்சமே யின்றி

     ஆர்ப்பரித் தெழுந்தது கடலில்!

நிலவது மிரவில் நிம்மதி யாக

     நிறைவுடன் ஒளிர்ந்தது வானில்!

உலகிலே மனிதன் உயிர்பயத் தோடே

   உலவிடும் நிலையையென் சொல்ல?


இசைப்பாடல்


 


இசைப்பாடல்

***************

பல்லவி
*********
உன்னையன்றி யார்தருவார் உரைப்பாய் கந்தா - என்
உள்ளமெனும் கோயிலிலே ஒளிர்வாய் கந்தா !
அனுபல்லவி
**************
நின்பதமே கதியென்று நெஞ்சுருகு மெளியேனின்
முன்வினைகள் களைந்துவிட்டு முத்தமிழால் அரவணைப்பாய்! ( உனையன்றி)
சரணம்
********
மின்னுமாறி ரண்டுகண்கள் வேலாவுன் எழில்கூட்டும்
பொன்னொளிரும் புன்னகையும் பூமுகத்திற் கருள்சேர்க்கும்
குன்றமர்ந்த குமராவுன் குருகுகொடி நலம்காக்கும்
சென்றவிட மெங்குமுன்றன் செவ்வேலே துணைநிற்கும்! ( உன்னையன்றி)
போதுமென்ற மனத்தோடு பூமியிலே வாழ்ந்திருந்தேன்
மோதுகின்ற கவலைகட்கு முடிவின்றித் தவிக்கின்றேன்
ஏதுசெய்ய வெனநீயே எனக்குரைத்தால் அகமலர்வேன்
யாதுமாக நெஞ்சத்தில் இருப்பவனும் நீதானே!
( உன்னையன்றி)
சியாமளா ராஜசேகர்