Sunday, December 9, 2018

ஏழ மவ பொலம்பல்...!!

காச்சமரம் சாஞ்சிருச்சி
காத்துகொன்னு போட்டுருச்சி !
கண்ணுபட்டுப் போயிருச்சோ
காலனது வேலதானோ ??
பூச்சூட்டிப் பாத்தபுள்ள
பூப்படஞ்ச செல்லமவ
பூமிக்குப் பாரமுன்னு
புயல்கொண்டு போயிருச்சோ ??
பேச்செழந்து நடபொணமா
பீதியில ஒறஞ்சிநிக்கோம் !
பேக்காத்துப் போட்டஆட்டம்
பேதலிக்க வச்சிருச்சே !!
சீச்சீன்னு யெம்பொழப்பு
சீரழிஞ்சி போயிருச்சே !
சீறிவந்த கசாப்புயலு
செறகொடிச்சிப் போட்டிருச்சே !!
காதடச்சிப் போயிருக்கு
கடும்பசியும் தாங்கலயே
கால்வவுறு நெரம்பலயே
கால்கையில வலுவுமில்ல !!
வேதனையச் சொன்னாத்தான்
வெந்தமனம் ஆறுமய்யா
வேரோட நாசமானா
வேறென்ன செய்வதய்யா ??
ஆதரவா அரசுமில்ல
அக்கறையும் காட்டவில்ல
ஆருசெஞ்ச பாவமிதோ
ஆண்டவனே நீயுமில்ல !!
ஏதுசெய்ய என்னசெய்ய
எடுத்துரைக்க நாதியில்ல
ஏழைமக்க வாக்கையில
என்னைக்கும் ஏத்தமில்ல !!
பாடுபட்ட கழனியெல்லாம்
பாழாக்கிப் போட்டுருச்சே
பாருசாமி எங்கோலம்
பைத்தியமா ஆக்கிருச்சே !!
வீடுவாசல் ஏதுமில்ல
வீதியெது தெரியவில்ல
வேறுபொழப் பேதுமில்ல
விதிப்படியே நடக்கட்டும்
காடுகொண்டு போறவரை
கைகாலு சுகமிருந்தா
காடுகர வெளையவச்சி
கரையேறி பொழச்சிடுவோம்
நாடிவந்து பலவொதவி
நல்லமன சோடுசெஞ்சி
நனையவச்ச சாமிகளே
நன்றிசொல்ல வார்த்தையில்லே !!
சியாமளா ராஜசேகர்

வண்ண விருத்தம் ....!!



வண்ண விருத்தம் !!!
**************************
மழைச்சார லோடு முகிற்கோலம் போட 
***மலைக்கோயில் மீது மயிலோடே 
எழிற்கூடு மாறு தனித்தாடு வேல
***இளைக்காம லோடி வரவேணும் !
அழைக்காத போதும் விழிப்போடு பேணு
***மருட்தேவ னேவு னிணையோடே 
செழிப்பான சோலை மலைக்கார நீயும் 
***சிறப்போடு வாழ அருள்வாயே !
சியாமளா ராஜசேகர்

வஞ்சியுன் சொல்லில் மலர்ந்து

செஞ்சாலி சாய்ந்தாடும் தென்றல் தழுவலில்
கஞ்சமது பூக்கும் கதிர்வரவில் - நெஞ்செலாம்
பஞ்சுப் பொதியாய்ப் பறந்து மிதந்திடும்
வஞ்சியுன் சொல்லில் மலர்ந்து.
சியாமளா ராஜசேகர்

தென்றல் ...!!!

நதிக்கரை யோரம் நளினமாய்க் கொஞ்சி நடைபழகும்
புதுமலர்ச் சோலையில் பூக்கள் மணத்தில் புரண்டுவரும் 
மதியொளிர் வேளை வருடி யிதமாய் மதிமயக்கும்
அதியழ காக அருவமாய் வந்தே அணைத்திடுமே !!
( கட்டளைக் கலித்துறை )
சியாமளா ராஜசேகர்

எழுசீர்ச் சந்த விருத்தம் ...!!!

எழுசீர்ச் சந்த விருத்தம் ..!!!
***************************************
மந்தி யாட மயிலு மாட
மானு மாடி மகிழுதே !
வந்த யானை யோடு காளை
மாடு கூடி யாடுதே !
அந்தி வானை மஞ்சு மூடி
அழகு கவிதை யாகுதே !
இந்த நேர மின்ப மாக
என்ற னுக்கு மானதே !!
சியாமளா ராஜசேகர்

கால் முளைத்த கனவுகள் !!


கால்முளைத்த கனவுகள் !! ( எழுசீர் விருத்தம் )
*************************************
வாடிய உழவர் மாடமா ளிகையில் 
     மகிழ்வுடன் உலவிடக் கண்டேன் !
பாடிய படியே தேக்கினில் செய்த 
     படிகளில் ஏறிட வியந்தேன் !
கூடிய நண்பர் குழுவுடன் சேர்ந்து 
     குறுங்கவி சமைத்திடச் சுவைத்தேன் !
ஈடிலா வின்பம் நுகர்ந்திடும் அவர்தம் 
       இயல்பினைக் கண்டுளம் நனைந்தேன் !

சுற்றிலும் படர்ந்த வயல்வெளி யெங்கும்
     சோர்விலாப் புன்னகை கண்டேன் !
நற்றமிழ் செழிப்பாய் உழுபவர் நாவில் 
     நனிநடம் புரிந்திடக் கண்டேன் !
புற்களின் மேலே பனித்துளி யாவும் 
     பொன்னென மின்னிடக் கண்டேன் !
நெற்கதி ராடச் சுமந்திடும் தாயாய் 
     நிலமகள் மலர்ந்திடக் கண்டேன் !!

தேங்கிய நீரில் மீன்களைக் கொத்தித் 
      தின்றிட நாரைகள் சூழ
ஓங்கிய தென்னை மரங்களின் நிழலில் 
     உழத்தியர் அம்மானை யாடப் 
பாங்கிய ரோடு கும்மிய டித்துப் 
     பழங்கதை களிப்புடன் பேசப்
பூங்குயில் பாட்டில் புத்துணர் வோடு
     பொறுமையாய்ப் பணிதொடர்ந் தனரே !!

பொன்னெழில் சிந்தும் அந்தியில் பரிதி 
     போகவே  வுளமின்றிச் சிவக்கத்
தென்றலி லாடும் நாற்றுகள் திரும்பிச் 
     செல்வோர்க்கு வாழ்த்துகள் கூற 
மென்னகை மாறா முகத்தொடே யவர்கள்  
     விடைபெறும் அழகினைக் கண்டு 
புன்சிரிப் போடு நெல்ஜெய ராமன் 
     புவனத்தி லுயிர்த்திடச் சிலிர்த்தேன் !!

எட்டிய தொலைவில் கால்முளைத் தாற்போல் 
     எழுந்தெதோ செல்வதை யுணர்ந்தேன் !
கட்டிலில் புரள நித்திரை கலைந்து 
     கண்டது கனவென அறிந்தேன் ! 
பட்டினிச் சாவு கண்முனே படமாய்ப் 
     பரிகசித் திடமனம் கசிந்தேன் !
மட்டிலா இன்பம் வழங்கிட இறையை
      வணங்கினேன் கைகளைக்  குவித்தே!! 

சியாமளா ராஜசேகர் 
      

தனிமையில் வருவாளோ ...?? ( எண்சீர் வண்ண விருத்தம் )


எண்சீர் வண்ண விருத்தம்... !!!
*****************************************
சந்தக் குழிப்பு :
********************
தனதன தத்தத் தனதன தத்தத்
தனதன தத்தத் தனதன தனதானா
பொலிவொடு பட்டுப் புடவையு டுத்திப் 
     பொடிநடை யிட்டுத் தனிமையில் வருவாளோ ?
சிலையென வெட்கப் படுமிரு சுட்டிச் 
     சிறுவிழி முத்துப் பரலென வொளிவீசும் !
தலைவியை மெச்சிக் கனிவொடு தொட்டுத் 
     தழுவிட யிற்றைக் கினியவள் விடுவாளோ ?
குலமகள் மத்தத் துடனெனை யொட்டிக் 
     குலவிட முத்தச் சுகமது புரிவேனே !!

சியாமளா ராஜசேகர்