Thursday, June 20, 2019

ஈற்றடிக்கு வெண்பா ...!!!

வேலை நிறுத்தமென வீணாய்க் கழிக்காமல் 
ஆலைப் பணியாற்றி(டு) அன்றாடம் - வேலையெதும் 
இல்லையேல் பட்டினியால் இன்னுயிர்க்கா பத்ததனால் 
நில்லா(து) இயங்கிடுவாய் நீ. 

ஊருக்குச் சென்றுவர உன்தயவும் தேவைதான் 
நேரும் விபத்துக்கு நீபொறுப்பா? - பேருந்தே! 
மல்லுகட் டாமலே மாநகர வீதிகளில் 
நில்லா(து) இயங்கிடுவாய் நீ. 

வதைக்கும் வலியால் வதங்கி விடாதே 
பதமாய் மருத்துவம் பார்ப்பேன்! - இதயமே! 
வெல்வதற்குன் நற்றுணை வேண்டும்! துடிப்பொடு 
நில்லா(து) இயங்கிடுவாய் நீ. 

தாவிக் குதித்துத் தலையாட்டும் பொம்மையே 
சாவி கொடுத்ததும் சாய்ந்ததேன்? - ஓவியமாய் 
மெல்லவெழு! பேத்தி விளையாட வந்திடுமுன் 
நில்லா(து) இயங்கிடுவாய் நீ.

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment