Wednesday, June 19, 2019

வாராரய்யா வாராரு கருப்பசாமி வாராரு ....!!!

வாராரய்யா வாராரு - எங்க 
கருப்பசாமி வாராரு !!
வாராரய்யா வாராரு - எங்க 
கருப்பசாமி வாராரு !!
ஊராரின் குறைகேட்க 
ஊர்வலமா வாராரு !!
உருவேற்ற உத்தமனார் 
ஓடோடி வாராரு !!

வீச்சரிவா கையிலேந்தி விழியுருட்டி வாராரு
தீச்செயல்கள் செய்வோரைத் திருத்திடத்தான் வாராரு
சூழ்ச்சிகளை முறியடிக்கச் சூட்டோடு வாராரு
பூச்சூட்டி வணங்குவோரைப் பூரிக்கச் செய்வாரு !!
காற்சலங்கை ஒலியதிரக் கச்சையோடு வாராரு
வேற்றுமைகள் விலக்கிடவே வேட்டையாட வாராரு
ஏற்றத்தைத் தருவதற்கே எடுத்தேறி வாராரு
போற்றுபவர் மனத்திலொளி பொங்கிடவே செய்வாரு !!
முறுக்குமீச அச்சுறுத்த முறைச்சபடி வாராரு
சிறுகொண்டை சாய்ந்திருக்க செருக்கோடு வாராரு
புறப்பட்டுப் புயலாகப் புரவியேறி வாராரு
வறுமைதனை விரட்டிவிட்டு மனங்குளிரச் செய்வாரு !!
சந்தனத்தில் பொட்டுவச்சு சாந்தமாக வாராரு
நொந்தவுளம் தேற்றிடவே நொடிப்போதில் வாராரு
வந்தவினை தீர்ப்பதற்கு மகிழ்ந்தோடி வாராரு
சந்ததமும் நினைப்போரைத் தலைநிமிரச் செய்வாரு !!
தர்ப்பையிலே பிறந்தவரு தனிமையிலே வாராரு
சப்பரத்தில் ஏறினாலும் தன்னிறைவாய் வாராரு
அப்பழுக்கே இல்லாமல் ஆடியாடி வாராரு
குப்பைகளைத் துடைத்துவிட்டுக் குலம்விளங்கச் செய்வாரு !!
பதினெட்டாம் படிகருப்பர் படியிறங்கி வாராரு
மதிமயக்கும் கள்ளழகர் மனம்படித்து வாராரு
துதிப்பவர்கள் துயர்களையத் துள்ளலொடு வாராரு
கதியென்று சரணடைந்தோர் கவலைநீங்கச் செய்வாரு !!
விளைநிலத்தைக் காத்திருக்க வீரனாக வாராரு
இளைத்தோரின் குரல்கேட்டே எளிமையாக வாராரு
வளமாக வாழ்வதற்கு வரங்கொடுக்க வாராரு
விளக்கேத்தி வழிபட்டால் விளங்கிடவே செய்வாரு !!
கம்பீர உருக்கொண்டு கருப்பசாமி வாராரு
செம்பவள இதழ்களிலே சிரிப்பேந்தி வாராரு
பெம்மானாம் கருப்பனாரு பிரம்பேந்தி வாராரு
தம்மைநம்பும் அடியவரைத் தரணிபோற்றச் செய்வாரு !!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment