Tuesday, April 25, 2017

வேல் ! வேல் ! வேல் !


ஆறுபடை வீடுடைய குருபரனின் கையில் 
***அலங்கார மாயொளிரும் அழகான செவ்வேல் ! 
ஏறுமயில் வாகனனின்‌ மார்பொடுற வாடி 
***எழிலார்ந்த குருகுகொடி யுடன்தருமே காட்சி ! 
கூறுமடி யார்வினைகள் வேரறுத்துக் காக்கும் 
***குன்றிலுறை குமரனுக்கே கம்பீரம் கொடுக்கும் ! 
நீறுபூசி வழிபாடு செய்வோரின் வாழ்வில் 
***நிழலாகத் தொடர்ந்துவந்து துணையாகும் வேலே ! 

வேலாயு தத்திற்கு மேலெதுவு மில்லை 
***வெற்றிகளைக் குவித்துவரும் வீரத்தின் சின்னம் ! 
சூலாயு தம்கொண்ட வுமையாளின் கையால் 
***சூரபத்ம னையழிக்கப் பெற்றதிந்த வேலே ! 
பாலாலே அபிடேகம் செய்வோர்தம் வாழ்வை 
***பரிசுத்த மாக்கியொளி கூட்டிடுவான் வேலன் ! 
காலனவ னணுகாமல் துணைநிற்கும் செவ்வேல் 
***கந்தவேளின் கருணையைப்போல் மின்னிடுமே முத்தாய் ! 

முத்தமிழால் வைதாரை யும்வாழ வைக்கும் 
***முருகவேளின் ஆயுதமாம் வேலுக்கீ டில்லை ! 
முத்திக்கும் வழிகோலும் முன்வினையைத் தீர்க்கும் 
***முப்போதும் முன்னின்றே ஐந்தொழிலும் செய்யும் ! 
சத்தியத்திற் குட்பட்டுப் போரிட்டு வெல்லும் 
***சங்கடங்கள் யாவையுமே சரிந்தோடச் செய்யும் ! 
சித்தருடன் ஞானியரும் யோகியரும் வாழ்த்தும் 
***சிறப்புகளைப் பெற்றிருக்கும் வேலைநிதம் போற்று ! 

போற்றிநிதம் வழிபட்டால் பொல்லாங்கு போக்கும் 
***பூத்தூவி வணங்கிடிலோ புதுத்தெளிவு பிறக்கும் ! 
ஊற்றெடுக்கும் அன்பாலே உளமுருகி வேண்ட 
***ஊழ்வினையை வேரோடு களைந்தெறியும் வல்வேல் ! 
கூற்றுவனும் அஞ்சிடுவான் அருகினிலே வந்து 
***கொய்திடவே நல்லுயிரைத் துணையாய்வேல் இருக்க ! 
ஏற்றமிகு நல்வாழ்வு இவ்வுலகில் கிட்டும் 
***ஈடில்லா வீடுபேற்றை யளிப்பதுவும் வேலே ! 

வேல்முகமோ அறிவைப்போல் சுடரிலையாய்ப் படர்ந்தும் 
***வேலினடி அறிவைப்போல் ஆழமாக நீண்டும் 
வேல்நுனியோ கூர்மையாயும் அமைந்துள்ள தாகும் 
***வேலைவழி படுவோர்தம் வேதனையுந் தீரும் ! 
வேலமைத்து வணங்குதலே வேற்கோட்ட மாகும் 
***வேலுக்கே அபிடேகம் பழமுதிர்ச்சோ லையிலே ! 
வேலைநிதம் வணங்குதலே வேலையெனக் கொண்டால் 
***வேலவனும் மிகமகிழ்ந்து வரமருள்வான் நன்றே !!

No comments:

Post a Comment