Monday, April 10, 2017

கைகள் கூப்பினேன் கவலை போக்கிடு ....!!!

இசைக்க இயலுமோ இதயம் ஒடிந்தபின் 
***இமைகள் இணையுமோ இரவின் மடியினில் 
அசைக்கும் நினைவுகள் அடங்க மறுத்திட 
***அகத்தில் எங்ஙனம் அமைதி மலர்ந்திடும் ?

துணையாய் வாழ்வினில் துயரைப் போக்கிட 
***துடிக்கும் மனத்தினில் துக்கம் துடைத்திட 
அணைக்கும் கரங்களாய் அன்பு காட்டிட 
***அன்னை வந்திடு அருளை வழங்கிடு !

இருக்கும் நாள்வரை என்னை உணர்த்திடு 
***இறைவி உன்னையே என்றும் நம்புவேன் 
திருவே சங்கடம் தீர்த்தே ஆதரி 
***தினமும்  என்னுளே தெளிவைத் தந்திடு !

விதியை மாற்றிட விரைந்து வந்திடு 
***வினைகள் யாவையும் விலக்கி ஓட்டிடு 
கதியே நீயென கண்ணீர் மல்கிட 
***கைகள் கூப்பினேன் கவலை போக்கிடு !

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment