Tuesday, January 3, 2017

எப்படிச் சொல்வேனடி ....???



நெஞ்சள்ளிச் சென்றவனை நினைக்கையிலே மனத்திரையில்  
>>>>நிழலாடும் அவனுருவே !
கஞ்சமலர்க் கன்னமென்றான் கருவண்டு விழிகளென்றான் 
>>>>கள்வனவன் அழகனடி !
செஞ்சாந்து  பொட்டிட்டுச் செல்லமாய்க் கிள்ளினனே
>>>>சிலிர்த்துவிட்டேன் என்தோழி !
வஞ்சியெனைச் சிலையென்றான் வளைக்கரமும் வனப்பென்றான் 
>>>>வளைத்துவிட்டான் அன்பாலே !

கள்ளூறும் இதழென்றான் கற்கண்டு மொழியென்றான் 
>>>>கவின்மலரே நீயென்றான் !
துள்ளிவரும் மானென்றான் தும்பைப்பூ சிரிப்பென்றான் 
>>>>துடியிடையோ கொடியென்றான் !
உள்ளத்தால் மழலையென்றான் உயிர்வளியும் நீயென்றான் 
>>>>உணர்வினிலே கலந்துவிட்டான் !
வெள்ளிவரும் வேளைக்குள் விரைந்திடுவேன் என்றுசென்றான் 
>>>>வெட்கமென்னைத் தின்றதடி !

சுந்தரனின் பேச்சினிலே சுகராக மீட்டலிலே 
>>>>சொக்கிவிட்டேன் தன்னாலே !
மந்திரமென் செய்தானோ மன்மதனோ மாயவனோ 
>>>>மயங்கிவிட்டேன் காதலிலே !
விந்தையென்ன நானறியேன் விழிமூடித் தவிக்கின்றேன் 
>>>>விரைந்துவர ஏங்குகின்றேன் !
எங்கிருந்த போதினிலும் என்னிதயம் அவன்வசமே 
>>>>எப்படிநான் சொல்வேனடி ....???

No comments:

Post a Comment