Monday, January 16, 2017

தைமகளே வருக !

நிலா முற்றம் குழுமம் நடத்திய பொங்கல் திருநாள் சிறப்புக் கவிதைப் போட்டியில் பரிசு வென்ற என் கவிதை !
தைமகளே வருக .....!!!
```````````````````````````````````
பிறந்திடுவாள் தைமகளும் மார்கழிக்குப் பின்னே 
>>>பிரியமுடன் பொங்கலெனப் பூப்பாளே நன்றே !
சிறப்பான திருநாளில் தமிழர்தம் வீட்டில்
>>>சீர்மிகவே கொண்டாட வளமாகும் வாழ்வே !
உறவோடு சேர்ந்திருந்து கதிரவனைப் போற்றி
>>>உளமார உழவர்க்கு நன்றியினைச் சொல்லி
மறத்தமிழன் வீரமுடன் காளையினை வீழ்த்தி
 >>>மனம்மகிழும் திருநாளே தைப்பொங்கல் நன்னாள் !!

செங்கதிரோன் கீழ்வானில் தலைதூக்கிப் பார்க்க
>>>செங்கரும்பின் தோகையொடு தோரணமும் ஆட
மங்களமாய்க் கோலமிட்ட முற்றத்தின் மீது
>>>மஞ்சள்,தாம் பூலமுடன் பூக்களையு மிட்டுச்
செங்கல்லில் அடுப்பமைத்து மண்பானை வைத்துத்
>>>திருவிளக்கை ஏற்றிவைத்தே ஆதவனை நோக்கிப்
பொங்குமுளத் தோடுதொழ புத்துணர்வும் கூடும்
>>>பொலிவான பண்டிகைநாள் பேரின்ப மீயும் !
புத்தரிசி பானையிலே பொங்குகின்ற நேரம்
>>>போடுகின்ற குலவையொலி காதோரம் கொஞ்சும் 

தித்திக்கும் பொங்கலிலே நெய்மணமும் வீசும்
>>>திகட்டாமல் நெஞ்சள்ளும் அச்சுவெல்ல வாசம் 
முத்தமிழும் கூடிவந்து நல்வாழ்த்து சொல்லும் 
>>>முப்போதும் தமிழ்மரபே பண்பாட்டில் வெல்லும் 
எத்திக்கில் இருந்தாலும் இதயமது பூக்கும்
>>>ஏற்றமுடன் கொண்டாட தைமகளே வாராய் !
( எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment