Friday, January 13, 2017

தைமகளே வாராய் ....!!!


மார்கழிக்கு விடைகொடுத்து மகிழ்வுடனே பூத்து 
>>>மங்களங்கள் அருளிடவே தைமகளே வாராய் !
நேர்வழியைக் காட்டிடவே நிமிர்ந்தபடி நீயும் 
>>>நீதியினை நிலைநாட்ட நித்திலமாய் வாராய் !
சீர்மல்கும் சிங்காரத் தமிழ்மரபைக் காக்கச்
>>>சித்திரமாய் நடைபோட்டுச்  சிறப்பிக்க வாராய் !
ஏர்பிடிக்கும் நல்லுழவர் வறுமைநிலை தீர்த்தே 
>>>ஏற்றமிகு வாழ்வளிக்க ஏந்திழையே வாராய் !

விவசாயி  துயர்துடைத்து வேளாண்மை ஒங்க 
>>>விடியலினை வழங்கிடவே விரைந்தேநீ வாராய் !
கவலையெல்லாம் கழித்துவிட்டுக் களிப்புதனைக் கூட்டக் 
>>>கற்பகமாய்க் கண்மலர்ந்து கனிவோடு வாராய் !
புவனமெங்கும் இன்பநிலை பொங்கிடவே நீயும் 
>>>புதுயுகத்தைக் காட்டிடவே பொற்புடனே வாராய் !
தவறான எண்ணங்கள் தலைதூக்கக் கண்டால் 
>>>தவிடுபொடி யாக்கிடவே தைமகளே வாராய் !

வன்முறைகள் தோற்றோடி வருநாட்க ளெல்லாம் 
>>>வண்ணமுற கவிபாடி வடிவுடனே வாராய் !
கன்னியரின் இதயத்தில்  சுபராகம் மீட்டிக் 
>>>கனவெல்லாம் ஈடேற்ற திருமகளே வாராய் !
புன்முறுவல் பூத்தபடி புதுமைகளைச் செய்ய 
>>>பொன்மகளே புனிதமுடன் பொலிவோடு வாராய் !
தன்மையுடன் தமிழரின பண்பாட்டின் மேன்மை 
>>>தரணியிலே தழைத்தோங்கத் தைமகளே வாராய் ....!!!

No comments:

Post a Comment