Tuesday, April 19, 2016

சித்திரை மகளே வாராய் ...!!!

பணிதனை இனிதாய் முடித்துப் 
***பங்குனி விடையும் பெறவே 
அணிசெய அழகாய்க் கிளம்பி 
***அடுத்தவள் வந்து விட்டாள் ! 
பிணியிலா வாழ்வை நல்க 
***பிரியமாய் ஆண்டின் முதலாய் 
திணிவுடன் பொங்கி எழுந்து 
***சித்திரை மகளே வாராய் ! 

இனமதக் கலவ ரங்கள் 
***இனிநட வாமல் காக்க 
கனவிலும் கொலைகள் கொள்ளை 
***கள்வெறி ஏது மின்றி 
நனவினில் புவியும் மலர்ந்து 
***நன்மைகள் கூடிப் பெருக 
தினந்தினம் சாந்தி நிலவ 
***சித்திரை மகளே வாராய் ! 

கழனியில் பயிர்கள் விளைய 
***கவலைகள் முற்றும் விலக 
உழவரும் வாழ்வில் உயர 
***உலகமே பசுமை யாக 
பழகிடும் மக்கள் எல்லாம் 
***பைந்தமிழ் மொழியில் பேச 
செழிப்புடன் நாட்டை உயர்த்த 
***சித்திரை மகளே வாராய் ! 

புகழெனும் மாய போதை 
***புதைந்திடச் செய்யா வண்ணம் 
அகத்தினில் அன்பு பூத்து 
***ஆணவம் மமதை நீங்க 
சுகமுற வளங்கள் பெற்று 
***சுமுகமாய் உறவு நிலைக்க 
செகத்தினில் அமைதி நிறைக்க 
***சித்திரை மகளே வாராய் ! 

இயற்கையும் சீறி டாமல் 
***இனிமையாய் நாட்கள் நகர 
சுயநல மின்றி மற்றோர் 
***துயர்களைத் துடைக்க உதவ 
வியப்புறும் படியாய் போற்றும் 
***விந்தைகள் நாளும் புரிந்து 
செயலினை நடத்தி வைக்க 
***சித்திரை மகளே வருக ....!!!

1 comment: