Monday, August 3, 2020

உள்ளம் தடுமாறும் போது ...!!!

உள்ளம் தடுமாறும் போது - எனை
உன்றன் கரமணைக்க வேண்டும் !
கள்ளம் கபடமில்லா நெஞ்சை - இனங்
காண உனதருளும் வேண்டும் !
துன்பம் சுழற்றியடித் தாலும் - துயர்
துடைக்க விரைந்துவர வேண்டும் !
இன்ப வெளிதன்னைக் காட்டி - என(து)
இதயம் குளிர்விக்க வேண்டும்!
பட்ட துயரெல்லாம் போதும் - இரு
பக்கத் துணையாக வேண்டும்!
எட்டுக் குடிவாழும் வேலா - இந்த
ஏழைக் குதவிசெய வேண்டும்!
கந்தா உனையன்றி யார்தான் - மனக்
கவலை தனைத்தீர்த்து வைப்பார்?
சிந்தி லிசைப்பாடற் கேட்டு - நின்
சிந்தை மகிழ்ந்திங்கு வாராய்!
நெஞ்ச முருகியுனைப் பாடி - என்
நெற்றி தனில்நீறு பூசி
கெஞ்சி யழைத்தும்வா ராயேல் - என்
கெண்டை விழிகளில்நீர் கொட்டும்!
நின்னைத் துதிக்குமடி யாரை - வேலா
நீயே அரவணைக்கா விட்டால்
பின்னர் எவர்வருவார் சொல்வாய் - உன்
பிள்ளை யெனைத்தாங்கிக் கொள்வாய்!!
சியாமளா ராஜசேகர்

முத்துவிழா வாழ்த்து (22:06:2020)

பத்துக்குப் பின்பிறந்த பதினொன்றாம் பிள்ளை
     பாசமுள்ள கிரேஸ்ஆச்சி பெற்றெடுத்த முல்லை !
உத்திரம்மாள் தங்கமகள் ரேவதியை மணந்த
    உயர்வான பண்புநிறை எங்கள்தாய் மாமன் !
வித்தகனாய் வலம்வந்து வெற்றிகளை யீட்டி 
    வேரூன்றி ஆலாக நிழல்கொடுக்கும் வள்ளல் !
தித்திக்கும் ஸ்ரீராமன் மந்திரத்தை நாளும்
    தினந்தோறும் உள்ளுருகி உச்சரிக்கும் பக்தன் !!

குலதெய்வ அருளாலே  நன்மக்கட் பெற்று
    கோவையிலே வாழ்ந்திருக்கும் நற்பேறு பெற்றாய்!
கலைமகளும் அலைமகளும் கருணையுடன் பார்க்க
     கல்வியுடன் பல்வளமும் பிள்ளைகட்(கு) அளித்தாய்!
இலையென்று சொல்லாமல் இல்லாதோர்க் கீயும்
     இதயத்தால் எம்மனதில்  இமயமென உயர்ந்தாய் !
நலத்துடனே எந்நாளும் நோய்நொடிக ளின்றி
நற்றமிழ்போல் வற்றாத வளத்துடனே வாழி!!

மருமகளும் மறுமகளாய்க் குடும்பத்தில் சேர
    மனத்தினுள்ளே மகிழ்ச்சிவெள்ளம் கரைபுரளக் கண்டோம்!
விருந்தோம்பும் பண்பைநின்  இல்லத்தில் தானே
     விரும்பிநாங்கள் அறியவேண்டும் என்றுமுடி வெடுத்தோம் !
திருமகனாம் தலைமகனின் வெற்றியினைக் கண்டு
    திருவுள்ளம் பூரிக்கும் தந்தைதாயாய் நீவிர்
பெருமைமிக இப்புவியில் வாழ்வாங்கு வாழப்
    பெருந்துணையாய் ஸ்ரீராமன் காவலிருப் பானே !!

நின்போலும் இறைபணியை அன்போடு செய்ய
    நெஞ்சத்தில் என்றனுக்கு நல்லுறுதி வேண்டும்!
கண்மணியாய் உறவுகளைக் கருத்தாகக் காக்கும்
    கனிவான தாய்போலும் கருணையுள்ளம் வேண்டும்!
இன்பதுன்பம் இரண்டையுமே சமமாக நோக்கும்
      இதயத்தை உன்னிடமே யான்கற்க வேண்டும்!
சொன்னவற்றை சொன்னவண்ணம் செய்துகாட்டும் திண்மை
      தூயவனே! உன்னிடந்தான் பயிற்சிபெற வேண்டும்!!

பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழி
    பலர்போற்ற பார்போற்ற பல்லாண்டு வாழி!
நில்லாது சுற்றுமிந்த பூமியிலே என்றும் 
      நெஞ்சத்தில் அமைதியுடன் பல்லாண்டு வாழி !
எல்லோரும் வாழ்த்திடவே பல்லாண்டு வாழி
   எண்பதைநீ நிறைவுசெய்தாய் பல்லாண்டு வாழி!
நல்லோனுன் வாழ்த்துகளை எமக்களித்து வாழி
       நன்றியுடன் கரம்குவித்தேன் நூறாண்டு வாழி!!

🍀🌹🍀🌹🍀🌹🍀🌹🍀🌹🍀🌹🍀🌹🍀🌹

முத்துவிழா காணும் எங்கள் லஜி மாமாவும்( Dr. லட்சுமண சிங்)  ரேவதி மாமியும் நிறை நலத்துடன் நூறாண்டு வாழ வேண்டுகிறேன்.
எங்களையும் உங்கள் வாழ்த்து மழையால் குளிர்விக்க பதம் தொட்டு வணங்கி வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏

கிரேஸி மோகன் நினைவஞ்சலி ...!!!

வண்ணப் பாடல் ....!!! :103
*************************
தந்தனான தான தந்த
தந்தனான தான தந்த
தந்தனான தான தந்த தனதானா

நம்கிரேசி மோக னென்ற
அன்பனான மேதை யென்றும்
நஞ்சிலாது பேசு மின்ப மொழியோனே!

நண்பனோடு பாவ றிந்து
பொங்குமாவ லோடு ணர்ந்து
நன்றியோடு தானி ணைந்த குணசீலா!

தம்பியோடு மேடை கண்டு
பந்தபாசம் பேணி வந்து
தந்தைபோலும் பாச மென்றும் பொழிவோனே!

சந்தம்பாட ஞான முண்டு
நெஞ்சிலூறும் வேக முண்டு
தங்கமான பாசு ரங்க ளருள்வோனே!

எம்பிரானின் தோள ணைந்து
தந்தையார்சொல் வேத மென்றும்
எந்தநாளும் வாழ்வில் நம்பு மெளியோனை

இன்றுநாமும் ஊர டங்கி
வென்றுவாழும் வாழ்வி லன்பை
என்றுகாண வென்று சிந்தை விழையாதோ?

உம்பரோடு நாட கங்கள்
அங்குநீயும் போட வன்றும்
ஒண்டியாக வேப றந்த அழகோனே!

ஒன்றுகூடி யாம்வணங்க
உந்துமாவ லோடு வந்த
உன்றனீடி லாவி ளங்கு புகழ்வாழி!!

சியாமளா ராஜசேகர்

நல்லழகில் நாணலும் நாணும் ...!!!

அல்லிக் குளத்தில் அதிகாலை யிற்குளித்து
முல்லைச் சிரிப்பில் முகம்பூத்தாள் - மெல்லிடையாள்
நல்லழகில் நாணலும் நாணிக் கரையோரம்
மெல்லநெளிந் தாடும் வியந்து .
சியாமளா ராஜசேகர்


Image may contain: சிறீ சிறீஸ்கந்தராசா

கிளிக்கண்ணி ....!!!


கன்னல் மொழிபேசிக் காதல் கலந்தினிக்க
மன்னவன் வந்தானடி - கிளியே
மையலில் வீழ்ந்தானடி!
மீசை முறுக்கிவிட்டு மெல்ல அருகில்வந்தே
ஆசை விதைத்தானடி - கிளியே
அள்ளி யணைத்தானடி!
சின்ன இடைதழுவும் தென்றலைத் தூதுவிட்டுத்
தன்னை மறந்தானடி - கிளியே
தஞ்ச மடைந்தானடி!
கோல மயிலென்று கொஞ்சி யழைத்தென்றன்
சேலை யிழுத்தானடி - கிளியே
சீண்டி மகிழ்ந்தானடி !
அந்திப் பொழுதினிலே ஆரத் தழுவிடவே
தந்திரம் செய்தானடி - கிளியே
சங்கதி சொன்னானடி!
கொட்டும் மழைநனைக்கக் கோதை எனையிழுத்துக்
கட்டிப் பிடித்தானடி - கிளியே
காதல் மொழிந்தானடி!
தங்க நிலவொளியில் சந்தக் கவிதைசொல்ல
அங்கம் குளிர்ந்தானடி - கிளியே
அன்பில் விழுந்தானடி!
எண்ணம் முழுதுமவன் இன்ப நினைவுகளில்
வண்ணம் வரைந்தேனடி - கிளியே
வார்த்தை மறந்தேனடி!
சியாமளா ராஜசேகர்
( சோலையில் பயின்றது)

திருமண வாழ்த்து ...!!!

Image may contain: 3 people, people standing and suit


திருமண வாழ்த்து ....!!!
மணமக்கள்
Dr. K. திலோத்தமா
Dr. A. பால அருண்
நாள்: 24 : 05 : 2020
குறித்தவண்ணம் நன்னாளில் குலசாமி துணைநிற்க
இறையருளால் நடக்குமிந்த இனியமண விழாவுக்கு
மறவாமல் வந்திருந்து வான்மழையும் பூத்தூவி
நிறைவான வாழ்த்துகளால் நெஞ்சத்தைத் தான்நனைக்கும் !!
ஊரடங்கு நீட்டிப்பால் ஊர்த்திரள வாய்ப்பின்றி
ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி அமைதியாக வேநடக்கும்
சீர்மிக்க திருமணத்தைத் தேவர்களும் கண்டிடவே
பார்போற்றும் தென்காசி பதிநோக்கிப் படையெடுப்பர் !!
வாழ்த்துகளால் மனம்நிறைந்து மணமேடை காண்கின்றாய்
காத்திருந்த நாள்கனியக் கணவனுடன் இணைகின்றாய்
பூத்தவுளம் சிலிர்த்தவண்ணம் பொலிவோடு விளங்குகின்றாய்
பேத்தியுனை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி யடைகின்றேன் !!
மங்கலமாய் மலர்மாலை மஞ்சளுடன் குங்குமமும்
பொங்கிவரும் மகிழ்ச்சியிலே புன்னகையும் அணிசேர்க்கச்
செங்கமலம் போலமுகம் சிவந்தழகாய் வெட்கத்தில்
தங்கமகள் நடைபயின்று தன்மையுடன் வருகின்றாள் !!
பாலஅருண் அருகினிலே பைங்கொடியாள் திலோத்தமாவும்
கோலமயில் போலழகாய்க் குளிர்நிலவாய் மலர்ந்திருக்க
மேலுலகோர் வாழ்த்துகளும் மேடையிலே எதிரொலிக்கக்
காலையிந்தத் திருப்பூட்டு கண்டுள்ளம் பூக்கின்றோம் !!
பெற்றோர்கள் முன்னிலையில் பெரியோர்தம் ஆசியுடன்
வெற்றிமாலை தோள்சுமந்து மேன்மையுடன் வாழியவே
கற்றறிந்த மணமக்காள் காலமெல்லாம் இளமையுடன்
நற்றமிழும் இனிமையும்போல் ஞாலத்தில் வாழியவே !!
சியாமளா ராஜசேகர்

கள்ளழகர் குரல் ...!!!

கள்ளழகர் குரல்...!!!
***********************
மாவிலையும் தோரணமும்
வழியெங்கும் காணவில்லை
பூவைத்துப் பட்டுடுத்திப்
பூவையரும் உலவவில்லை
தாவிவரும் மக்களலை
தரைமீது தெரியவில்லை
பாவியந்தக் கொரோனாவால்
பாதையெல்லாம் பாலையாச்சே!
தேர்சுற்றி வரவில்லை
திருவீதி வழிதனிலே
ஊர்திரண்டு கொண்டாடும்
ஒப்பில்லாத் திருமணத்தைப்
பார்ப்பதற்கு முடியாமல்
பரிதவிப்பில் நானிருந்தும்
சீர்மிகுந்த மதுரைக்குத்
தேடிவர இயலவில்லை!
பளபளக்கும் பொற்பரியில்
பட்டுடுத்திப் பவனிவர
அளவில்லா மகிழ்வுடனே
அழகர்நான் காத்திருந்தேன்!
களங்கத்தைக் கற்பித்த
கரோனாவால் சித்திரையில்
வளம்நிறைந்த வழியெங்கும்
மருந்துக்கும் ஆளிலையே!!
விடக்கிருமி அச்சத்தால்
வீடடங்கிக் கிடக்கின்றீர்
கடவுளரின் திருக்கோயில்
கதவடைத்து வைத்துவிட்டீர்
மடைதிறக்க வழியில்லை
வைகையிலும் வெள்ளமில்லை
தடைதாண்டி மக்களின்றித்
தனித்துவர மனமில்லை !!
இந்நிலைமை மாறிவிடும்
இடர்யாவும் தீர்ந்துவிடும்
நொந்தவுளம் தேற்றிடுவேன்
நோய்த்தொற்றை அழித்திடுவேன்
சந்தனமும் பன்னீரும்
சாலையெலாம் மணந்திருக்க
வந்திடுவேன் புரவியேறி
வரும்வருடம் உமைப்பார்க்க!!
சியாமளா ராஜசேகர்Image may contain: text that says "RA"