Monday, August 3, 2020

உள்ளம் தடுமாறும் போது ...!!!

உள்ளம் தடுமாறும் போது - எனை
உன்றன் கரமணைக்க வேண்டும் !
கள்ளம் கபடமில்லா நெஞ்சை - இனங்
காண உனதருளும் வேண்டும் !
துன்பம் சுழற்றியடித் தாலும் - துயர்
துடைக்க விரைந்துவர வேண்டும் !
இன்ப வெளிதன்னைக் காட்டி - என(து)
இதயம் குளிர்விக்க வேண்டும்!
பட்ட துயரெல்லாம் போதும் - இரு
பக்கத் துணையாக வேண்டும்!
எட்டுக் குடிவாழும் வேலா - இந்த
ஏழைக் குதவிசெய வேண்டும்!
கந்தா உனையன்றி யார்தான் - மனக்
கவலை தனைத்தீர்த்து வைப்பார்?
சிந்தி லிசைப்பாடற் கேட்டு - நின்
சிந்தை மகிழ்ந்திங்கு வாராய்!
நெஞ்ச முருகியுனைப் பாடி - என்
நெற்றி தனில்நீறு பூசி
கெஞ்சி யழைத்தும்வா ராயேல் - என்
கெண்டை விழிகளில்நீர் கொட்டும்!
நின்னைத் துதிக்குமடி யாரை - வேலா
நீயே அரவணைக்கா விட்டால்
பின்னர் எவர்வருவார் சொல்வாய் - உன்
பிள்ளை யெனைத்தாங்கிக் கொள்வாய்!!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment