Monday, August 3, 2020

கிளிக்கண்ணி ....!!!


கன்னல் மொழிபேசிக் காதல் கலந்தினிக்க
மன்னவன் வந்தானடி - கிளியே
மையலில் வீழ்ந்தானடி!
மீசை முறுக்கிவிட்டு மெல்ல அருகில்வந்தே
ஆசை விதைத்தானடி - கிளியே
அள்ளி யணைத்தானடி!
சின்ன இடைதழுவும் தென்றலைத் தூதுவிட்டுத்
தன்னை மறந்தானடி - கிளியே
தஞ்ச மடைந்தானடி!
கோல மயிலென்று கொஞ்சி யழைத்தென்றன்
சேலை யிழுத்தானடி - கிளியே
சீண்டி மகிழ்ந்தானடி !
அந்திப் பொழுதினிலே ஆரத் தழுவிடவே
தந்திரம் செய்தானடி - கிளியே
சங்கதி சொன்னானடி!
கொட்டும் மழைநனைக்கக் கோதை எனையிழுத்துக்
கட்டிப் பிடித்தானடி - கிளியே
காதல் மொழிந்தானடி!
தங்க நிலவொளியில் சந்தக் கவிதைசொல்ல
அங்கம் குளிர்ந்தானடி - கிளியே
அன்பில் விழுந்தானடி!
எண்ணம் முழுதுமவன் இன்ப நினைவுகளில்
வண்ணம் வரைந்தேனடி - கிளியே
வார்த்தை மறந்தேனடி!
சியாமளா ராஜசேகர்
( சோலையில் பயின்றது)

No comments:

Post a Comment