Monday, August 3, 2020

முத்துவிழா வாழ்த்து (22:06:2020)

பத்துக்குப் பின்பிறந்த பதினொன்றாம் பிள்ளை
     பாசமுள்ள கிரேஸ்ஆச்சி பெற்றெடுத்த முல்லை !
உத்திரம்மாள் தங்கமகள் ரேவதியை மணந்த
    உயர்வான பண்புநிறை எங்கள்தாய் மாமன் !
வித்தகனாய் வலம்வந்து வெற்றிகளை யீட்டி 
    வேரூன்றி ஆலாக நிழல்கொடுக்கும் வள்ளல் !
தித்திக்கும் ஸ்ரீராமன் மந்திரத்தை நாளும்
    தினந்தோறும் உள்ளுருகி உச்சரிக்கும் பக்தன் !!

குலதெய்வ அருளாலே  நன்மக்கட் பெற்று
    கோவையிலே வாழ்ந்திருக்கும் நற்பேறு பெற்றாய்!
கலைமகளும் அலைமகளும் கருணையுடன் பார்க்க
     கல்வியுடன் பல்வளமும் பிள்ளைகட்(கு) அளித்தாய்!
இலையென்று சொல்லாமல் இல்லாதோர்க் கீயும்
     இதயத்தால் எம்மனதில்  இமயமென உயர்ந்தாய் !
நலத்துடனே எந்நாளும் நோய்நொடிக ளின்றி
நற்றமிழ்போல் வற்றாத வளத்துடனே வாழி!!

மருமகளும் மறுமகளாய்க் குடும்பத்தில் சேர
    மனத்தினுள்ளே மகிழ்ச்சிவெள்ளம் கரைபுரளக் கண்டோம்!
விருந்தோம்பும் பண்பைநின்  இல்லத்தில் தானே
     விரும்பிநாங்கள் அறியவேண்டும் என்றுமுடி வெடுத்தோம் !
திருமகனாம் தலைமகனின் வெற்றியினைக் கண்டு
    திருவுள்ளம் பூரிக்கும் தந்தைதாயாய் நீவிர்
பெருமைமிக இப்புவியில் வாழ்வாங்கு வாழப்
    பெருந்துணையாய் ஸ்ரீராமன் காவலிருப் பானே !!

நின்போலும் இறைபணியை அன்போடு செய்ய
    நெஞ்சத்தில் என்றனுக்கு நல்லுறுதி வேண்டும்!
கண்மணியாய் உறவுகளைக் கருத்தாகக் காக்கும்
    கனிவான தாய்போலும் கருணையுள்ளம் வேண்டும்!
இன்பதுன்பம் இரண்டையுமே சமமாக நோக்கும்
      இதயத்தை உன்னிடமே யான்கற்க வேண்டும்!
சொன்னவற்றை சொன்னவண்ணம் செய்துகாட்டும் திண்மை
      தூயவனே! உன்னிடந்தான் பயிற்சிபெற வேண்டும்!!

பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழி
    பலர்போற்ற பார்போற்ற பல்லாண்டு வாழி!
நில்லாது சுற்றுமிந்த பூமியிலே என்றும் 
      நெஞ்சத்தில் அமைதியுடன் பல்லாண்டு வாழி !
எல்லோரும் வாழ்த்திடவே பல்லாண்டு வாழி
   எண்பதைநீ நிறைவுசெய்தாய் பல்லாண்டு வாழி!
நல்லோனுன் வாழ்த்துகளை எமக்களித்து வாழி
       நன்றியுடன் கரம்குவித்தேன் நூறாண்டு வாழி!!

🍀🌹🍀🌹🍀🌹🍀🌹🍀🌹🍀🌹🍀🌹🍀🌹

முத்துவிழா காணும் எங்கள் லஜி மாமாவும்( Dr. லட்சுமண சிங்)  ரேவதி மாமியும் நிறை நலத்துடன் நூறாண்டு வாழ வேண்டுகிறேன்.
எங்களையும் உங்கள் வாழ்த்து மழையால் குளிர்விக்க பதம் தொட்டு வணங்கி வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment