Friday, May 24, 2019

முருகன் அந்தாதி ...!!!




உலகம் முழுவதும் உன்னருள் வேண்ட
மலர்ந்த முகத்துடன் வாராய் ! - தலையில்
மதிநதி சூடிய மன்றாடி மைந்த!
துதிப்போர்க்கு நீயே துணை . 1.
துணையாய் மயிலும் சுடர்வடி வேலும் 
இணைந்து வருமே எழிலாய் - அணைப்பில் 
உருகி விழிநீர் உகுக்க மனத்தின் 
இருளும் விலகும் இனி. 2.
இனியொரு துன்பம் எனக்கிலை யென்றே 
இனிமையாய்ப் பாடு மிதயம் ! - பனிமலை .
மீதுறை யீசன் விரும்பும் உமைபாலன்
மாதவத் தோனை வணங்கு. 3 .
வணங்கிடும் கைகள் வடிவத்தைக் கண்டே 
இணங்கியதை வேலென எண்ணி - கணமும் 
பொறுக்கா துடனே புயலென வந்து 
மறுக்கா தணைப்பான் மகிழ்ந்து. 4.
மகிழ்ந்தாடும் வள்ளியுடன் வண்ண மயிலில் 
குகனவன் சிந்தை குளிர்ந்தே - புகழ்பாடும் 
அன்பர்தம் துன்ப மகற்ற விரைந்துவந்து 
இன்பம் தருவான் இனிது. 5.
இனிதாம் தமிழை இசையொடு கேட்டுக் 
கனிவாய் மலர்ந்திடும் கந்தன் ! - தனத்தொடு 
ஞான மருளுவன் நாத வடிவினன்
வானவர் போற்றும் வரம் . 6.
வரங்களை நல்கும் வடிவே லவனின்
திருவடி பற்றவினை தீரும் - உருவில் 
அழகன் குமரன் அறுமுகத் தானைத் 
தொழுதிடத் தோன்றும் சுகம். 7.
சுகத்தைக் கருதிச் சுயநலத் தோடே 
அகத்திலன் பின்றி அலைந்தால் - பகைமைதான் 
மிஞ்சிநிற்கும்! வாழ்வினில் வெல்ல குருபரனை
நெஞ்சே நிதமும் நினை . 8.
நினைத்து நினைத்து நெகிழ்ந்து பணிந்து 
நனைந்த மனத்துடன் நைந்தேன் !- அனைத்து 
மறிந்து மறியான்போ லாட்கொளவா ராயேல் 
சிறியேன் பிழைப்பேனோ செப்பு. 9.
செப்பு மொழியாலென் சிந்தை கவர்ந்திடும் 
அப்பனே! வாழ்த்தால் அலங்கரிப்பேன்! - முப்போதும் 
சூட்டுவேன் பாமாலை! தூயனே! நின்னன்பை
ஊட்டிட வாழும் உலகு. 10.
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment