Friday, May 3, 2019

ஐயப்பன் பாடல் ....!!!



  பல்லவி 
                 ************
மனமுருகி உனையழைத்தேன்
     வாராயோ மணிகண்டா ! - உன் 
மலர்ப்பாத தரிசனம்போல் 
     மகிழ்வேதும் இனியுண்டா ?

               அனுபல்லவி 
               ******************
தினம்பாடிக் கதறுவதுன் 
     செவிகளிலே விழவிலையா ? - உன் 
திருவருளைப் பொழிந்திடவே 
      சிறிதேனும் உளமிலையா ??

                  சரணம் 
                  **********
மெய்யென்றே உனைக்கருதி மெய்விதிர்க்க  வேண்டிநின்றேன் 
செய்தவற்றை மன்னித்துச் சேயென்னைக் காத்திடுவாய் 
நெய்யாலே அபிஷேகம் நெஞ்சத்தை உருக்காதோ ?
அய்யப்பா இனியாற்றேன் அன்புடனே அரவணைப்பாய் !!     ( மனமுருகி )

சாந்தமுடன் எழிலுருவில் சந்தனமும் மணக்குதய்யா
ஏந்திவரும் இருமுடியில் என்னிதயம் சிலிர்க்குதய்யா
காந்தமலை ஜோதியிலே கள்ளமனம் கரையுதய்யா
நீந்திவரும் வானலையில் நீகாட்சி தந்திடய்யா !!       ( மனமுருகி )

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment