Wednesday, May 29, 2019

மனம் போன போக்கெல்லாம் போக வேண்டா ...!!!

மனம்போன போக்கெல்லாம் போக வேண்டா ...!!!
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *  * * * * * * * * * * * 
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டா 
***மதவெறியால் தறிகெட்டுத் திரிய வேண்டா 
சினங்கொண்டு சுடுசொற்கள் உமிழ வேண்டா 
***தீயோரை நட்பாகக் கொள்ளல் வேண்டா 
கனித்தமிழில் பேசுதற்குத் தயக்கம் வேண்டா 
***கடுகளவும் பிறரைப்புண் படுத்த வேண்டா 
புனிதமிகு பண்பாட்டை மறக்க வேண்டா 
***பொலிவான இயற்கைதனைச் சிதைக்க வேண்டா !!

உதவிசெய்ய ஒருபோதும் தயங்க வேண்டா 
***உயிர்களிடம் அன்புகாட்ட மறக்க வேண்டா 
வதந்திகளை அப்படியே நம்ப வேண்டா 
***வருந்துயரால் கவலையிலே மூழ்க வேண்டா 
பதவியினால் பொல்லாங்கு செய்ய வேண்டா 
***பணத்தாலே விலைக்குவாங்க எண்ண வேண்டா 
விதியென்று மூலையிலே முடங்க வேண்டா 
***வியர்வைசிந்த உழைக்காமல் இருக்க வேண்டா !!

முகநூலில் முப்போதும் மூழ்க வேண்டா 
***முகம்தெரியா மனிதருடன் பழக வேண்டா 
சுகம்மட்டும் வாழ்வென்று கருத வேண்டா 
***சோகத்தை இதயத்தில் சுமக்க வேண்டா 
புகழென்னும் போதையிலே திளைக்க வேண்டா 
***பொய்யான காதலொடு திரிய  வேண்டா 
அகல்விளக்காய் ஒளிகொடுக்கத் தயங்க வேண்டா 
***அடைக்காலமாய் வருவோரை வெறுக்க வேண்டா !!

புறங்கூறி நல்லபெயர் வாங்க வேண்டா 
***பொறுப்புகளை உதறிவிட்டுச் சுற்ற வேண்டா 
அறநெறியின் வழியினின்றும் விலக வேண்டா 
***ஆசைகளை அளவின்றிச் சுமக்க வேண்டா 
பிறர்பொருளை அபகரிக்க முயல வேண்டா 
***பெற்றோரைச் சுமையாகக் கருத வேண்டா 
இறப்புவரு மென்றுதினம் அஞ்ச வேண்டா 
***இறைவனது தாள்பற்ற மறவாய் நெஞ்சே !!

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment