Friday, November 9, 2018

கவிஞர் பழனிகுமார் அவர்களுக்கு மணிவிழா வாழ்த்து ...!!!

அன்பான உறவுகளின் அரவணைப்பில் நீயும்
***ஆறுபத்தை நிறைவுசெய்தே அடுத்தவடி வைத்தாய் !
இன்றுன்றன் பிறந்தநாளில் மனம்நிறைந்த வாழ்த்தை
***இன்றமிழில் சொல்லிடுவேன் ஏற்றுக்கொள் வாயே !
என்றும்நீ உடல்நலமும் உளநலமும் பெற்றே 
***எழுகதிராய்க் கவிவானில் வளையவர வேண்டும் !
பொன்போலும் மிக்கொளிரும் பண்பிலுயர் நட்பே
***புவனத்தில் பேரோடும் புகழோடும் வாழி !!
சித்தமெலாம் குமுகாய நலந்தன்னை நாடும்
***சீர்திருத்தும் எண்ணத்தில் அதுகுறித்தே பாடும் !
சத்தியத்தின் வழிநின்று அறிவுரைகள் சொல்லும்
***சமத்துவத்தை வலியுறுத்தி நற்படைப்பு நல்கும் !
முத்தான கவிதைகளில் மனிதநேயம் பூக்கும்
***முப்போதும் முழுவீச்சில் வாட்டத்தைப் போக்கும் !
தித்திக்கும் தமிழன்னை ஆசிகளால் நீயும்
***சீரோடும் சிறப்போடும் பல்லாண்டு வாழி !!
ஈன்றெடுத்த அன்னைமனம் ஈரவிழி யுடனே
***எங்கிருந்த போதுமுனை அன்போடு வாழ்த்தும் !
வான்மேகம் குளிர்ந்துவந்து வாழ்த்துமழை தூவும்
***வளர்நிலவும் வழிமொழிந்து தண்ணொளியால் வாழ்த்தும் !
மேன்மைமிகு நின்பாக்கள் பார்மெச்ச வேண்டும்
***வித்தகனே நின்பெருமை விண்பேச வேண்டும் !
தேன்தமிழ்போல் இனிமையுடன் இளமையொடு நாளும்
****திக்கெட்டும் புகழ்மணக்க நூறாண்டு வாழி !!
அன்பிற்கினிய சகோதரர் கவிஞர் பழனிகுமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 💐💐💐💐💐💐

No comments:

Post a Comment