Friday, May 8, 2020

வஞ்சியவளேயென் வாழ்வு ...!!!

Image may contain: Ramadoss Gandhi, standing and outdoor

அன்பு மிகுதியா லள்ளி யணைத்தனள்
சின்ன விதழில் சிரிப்பை யுதிர்த்தனள்
கன்னல் மொழியில் கவிதை வரைந்தனள்
இன்ப மளித்தன ளின்று.
இன்று மழைபோ லிதயங் குளிர்ந்தனள்
சென்றதை யெண்ணிச் சிலிர்ப்பில் மகிழ்ந்தனள்
கன்னி யிவளேயென் காதலி என்றிடப்
பொன்னா யொளிர்ந்தனள் பூத்து.
பூத்த மலராய்ப் பொலிவாய் விளங்கினள்
வார்த்தை யடுக்கி வசியப் படுத்தினள்
காத்துக் கிடக்கக் கனவில் கலந்தனள்
பார்த்ததும் கொஞ்சினள் பட்டு.
பட்டுப் புடவையில் பைங்கிளி போலவள்
மட்டிலா வின்ப மழையில் நனைத்தனள்
வெட்டியே மின்ன வெகுவாய்ப் பயந்தனள்
கட்டித்தான் கொண்டனள் கண்டு.
கண்டதும் காதல் கனிந்திடப் பாடினள்
வண்ண நிலவாய் வளையவந் தாடினள்
தண்டலைத் தென்றலாய்த் தாவித் தழுவினள்
பெண்மயிலா ளாக்கினள் பித்து.
பித்துப் பிடித்தெனைப் பின்தொடரச் செய்தனள்
பத்தரை மாற்றுப் பசும்பொன் னொளியவள்
தித்திக்கச் செந்தமிழ்த் தேன்பருகத் தந்தனள்
நித்தஞ் சுவைத்ததென் நெஞ்சு .
நெஞ்ச மிளகி நிழலாய்க் குளிர்ந்தனள்
மஞ்சள் நிறத்து மதியாய்ச் சிரித்தனள்
கொஞ்சு மழகில் குழவியை யொத்தனள்
வஞ்சி யவளேயென் வாழ்வு.
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment