Friday, May 8, 2020

இலாவணி ...!!!

Image may contain: people standing and outdoor

இலாவணி...!!!
******************
#அவன்
ஊரடங்கிக் கிடக்கையிலே ஆருயிரே நம்மிருவர்
உள்ளங்கள் அடங்கவில்லை ஏனோ ஏனோ ?
ஊருக்குள்ளே தனித்திருந்தும் தீரவில்லை நம்மயக்கம்
ஓரிடத்தில் தனித்திருக்கத் தானோ தானோ ??
கால்கொலுசு சத்தத்திலே தோலெல்லாம் சிலிர்க்குதடி
காதலிலே தவிக்கவிட லாமா லாமா ?
பால்வண்ண முகத்தழகைச் சேலாடும் விழியழகைப்
பார்த்துரொம்ப நாளாச்சு வாம்மா வாம்மா !!
சோலையிலே யாருமில்லே சாலையிலே வண்டியில்லே
சோடியாகப் பேசலாமா சொல்லு சொல்லு !
மாலையிலே கதிரவனும் நீலவானில் சிவந்திருச்சி
மரிக்கொழுந்தே போகலாமோ நில்லு நில்லு !!
அத்தமவன் உனைப்பார்க்கப் பித்தாத்தான் கிடக்குறனே
ஆனாலிந்த வேளைசரி யில்ல யில்ல !
நித்தமுந்தன் நெனப்புவந்து கொத்திக்கொத்தித் தின்னுதய்யா
நேருக்குநேர் பார்ப்பதெல்லாம் தொல்ல தொல்ல !!
நானுநீயும் தனிச்சிருந்தா ட்ரோனுசுத்திப் படம்பிடிக்கும்
நம்மமானம் காத்திலோடிப் போகும் போகும்!
வானுமண்ணும் சாட்சியாக நானிருப்பேன் ஒனக்காக
மண்ணச்சுற்றும் நோய்த்தொற்றும் சாகும் சாகும் !!
இந்தநிலை மாறிவிடும் தொந்தரவு தீர்ந்துவிடும்
இன்பமெல்லாம் கூடிவரும் முறையா முறையா !
சொந்தபந்தம் எல்லோரும் வந்திருந்து நமைவாழ்த்தச்
சுந்தரனே சேர்ந்திடுவோம் சரியா சரியா ??
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment