Thursday, March 26, 2015

கும்மிப் பாடல்



நந்த வனத்திலே கூடிடுவோம் -செந்தில் 
>>>>நாதனை எண்ணியே பாடிடுவோம் 
சந்தத் திருப்புகழ் கற்றிடுவோம் - கந்த
>>>>சாமியை நாளுமே போற்றிடுவோம் !

கோலக் குறமகள் நாதனடி - தன்னை 
>>>>கும்பிடும் பக்தரின் தேவனடி 
வேல வனின்திருப் பாதமடி - அன்பாய் 
>>>>வேண்ட வரந்தரும் பாலனடி !

ஆடும் மயிலினில் வந்திடுவான் - நேரில் 
>>>>அற்புத லீலைகள் செய்திடுவான் 
பாடும் அடியவர்க் காத்திடுவான் - பாரில் 
>>>>பட்டத் துயரமும் தீர்த்திடுவான் !

வேழ முகத்தினன் சோதரனே - என்றும் 
>>>>வெற்றி குவித்திடும் வேலவனே 
வாழ வழிசெயும் மாயவனே - என்றும்  
>>>>வஞ்ச மகற்றிடும் தூயவனே !

பாத சிலம்பொலி ஓங்கியதே - அன்பர் 
>>>>பஞ்சக் கிலேசமும் நீங்கியதே 
கீத மிசைத்திட தேங்கியதே -இன்பம் 
>>>>கெஞ்சி இதயமும் தாங்கியதே !

தேவி உமையவள் பாலகனாம் - அள்ளும் 
>>>>தெள்ளு தமிழ்மொழிக் காவலனாம் 
கூவி அழைத்திடில் ஓடிவந்து - உள்ளம் 
>>>>தாவி அணைத்திடும் தாயவனாம் !

நாடு மடியவர் தாசனடி - தம்மை 
>>>>நம்பித் துதிப்பவர் தேசனடி 
ஈடு இணையிலா வாசனடி - இம்மை 
>>>>இன்னல் கலைந்திடும் ராசனடி ! 

கூடிக் குலவையும் போடயிலே - பெண்கள் 
>>>>கும்மி யடித்திடும் வேளையிலே
நாடித் தொழுதிடும் வேளையிலே - மண்ணில் 
நன்மை பெருகிடச் செய்துவிடு ! 

No comments:

Post a Comment